படைப்பாளன் ஆடியோ : வாயை திறந்து பேசுனாலே கதையை திருடுற காலம் இது - மனோபாலா
சென்னை: எங்கேயாவது போய் வாயைத் திறந்தாலே கதையை திருடிக்கொண்டு போய்விடுகின்றனர். இயக்குநர் பாக்யராஜின் கதையையே திருடிவிட்டனர். அவருடைய இன்று போய் நாளை வா படத்தின் கதையைத் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா பன்ற திரைப்படமாக வந்தது என்று இயக்குர் மனோபாலா பேசினார்.
தமிழ் சினிமா இப்போது எந்த நிலைமைக்கு போகிறது என்று தெரியவில்லை. பல கோடி செலவு செய்து ஒரு படத்தை எடுத்து அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே அது சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகிறது. இது ஒரு பக்கம் திரைத்துறையை சேர்ந்தவர்களை படாதபாடு படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் கதை திருட்டு மறுபக்கம் இயக்குனர்களை போட்டு வதைக்கிறது.

சினிமா துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கதை திருட்டு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. சமீப காலமாக இது மேலும் தீவிரமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் சட்ட விதிமுறைகள் தெளிவாக இல்லாதது தான். அப்படி காபிரைட்ஸ் சட்டத்தை உபயோகப்படுத்துபவர்களும் வெகு சிலரே. நீதிமன்றம் வரை இந்த பிரச்சனைகள் எடுத்து செல்லபட்டாலும் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் வேறு ஒருவரின் கற்பனையை சுரண்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது தீவிரமடைந்த கதை திருட்டு சம்பவங்களை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் பிரபு ராஜா. படைப்பாளன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார் பிரபு ராஜா. தியான் பிக்சர்ஸ் சார்பில் பிரபுலீன்பாபு, எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் மற்றும் ஆண்டனி ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
அவருடன் இணைந்து மனோபாலா, ஜாக்குவார் தங்கம், காக்க முட்டை ரமேஷ், இயக்குனர் தருண் கோபி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிருபாகரன் இசையமைப்பில் வேல்முருகன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை திருட்டு நடப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இப்படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படைப்பாளன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் இயக்குனர் பாக்யராஜ், மனோபாலா, கவிஞர் சினேகன், சீனு ராமசாமி, வேல்முருகன், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு, வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மனோபாலா சுவாரஸ்யமான பல தகவல்களை மிகவும் நகைச்சுவையோடு பேசினார். அப்போது அவர், நான் இந்த படத்தில் நடித்திருந்தாலும் படத்தின் கதை என்ன என்பது எனக்கே தெரியாது. இயக்குனர் பிரபு ராஜாவுக்காவது இப்படத்தின் கதை தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது என்று மிகவும் நகைச்சுவையோடு அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அந்த அளவிற்கு கதை திருட்டு முற்றிப்போய்விட்டது. வாயை திறந்தாலே கதையை சுருட்டி கொண்டு போய்விடுகின்றனர் என்றார். திரைக்கதையிலே மன்னனாக இருக்கும் இயக்குனர் பாக்யராஜை பற்றி நகைச்சுவையாக பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கலாய்த்தார். இப்படி பல ஸ்வாரஸ்யங்களுடன் அந்த ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குனர் பாக்யராஜ் நடித்த இன்று போய் நாளை வா படத்தின் கதை தான் அப்படியே கண்ணா லட்டு தின்ன ஆசையாக வெளிவந்தது. இந்த பிரச்சனை ஏகப்பட்ட பஞ்சாயத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலமாகவாவது கதை திருட்டு பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று ரசிகர்களும் திரையுல பிரமுகர்களும் விரும்புகின்றனர். படைப்பாளன் படம் வெளியான பிறகு தான் இது படைப்பாளனுக்கு காப்பாளனாக இருக்குமா இருக்காதா என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications











