ரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது, ஆனால்...: சேரன்
சென்னை: ரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது என்று இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார்.
படம் இயக்குவதற்கு ஒரு குட்டி பிரேக் விட்டிருந்த சேரன் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள படம் திருமணம். இந்த படத்தில் சுகன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழா மேடையில் சேரன் பேசியதாவது.

வாழ்க்கை
இந்த படம் வெகுஜன மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம் என்பதை மட்டும் தான் சொல்வேன். ட்ரெய்லரை பார்த்துவிட்டு இது தான் என்று சொல்லிவிட்டார் பாரதிராஜா சார். அவர் சொன்னது தான் பிரச்சனை. பொருளாதாரம் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. பொருளாதார பிரச்சனையில் தான் அனைத்து உறவுகளின் சிக்கல்களும் உருவாகிறது. அதை தவிரப்பது எப்படி என்று தான் இந்த படம். ஒரு பிரேமை பார்த்துவிட்டு கதையை சொன்ன பாரதிராஜா சார் ஜீனியஸ்.

இயக்குனர்கள்
இந்த மேடையில் முன்னோடிகள் மற்றும் இன்றைய நம்பிக்கை தரக் கூடிய இயக்குனர்களை ஏன் இணைத்தேன் என்றால், முன்னோடிகளுக்கு மரியாதை தரும் காலகட்டம், மரியாதை தரும் நிகழ்வுகள் குறைந்து கொண்டே வருகிறது. வீட்டில் கூட பெரியவர்களின் பேச்சை மதிப்பது தள்ளிக் கொண்டே போகிறது. முன்னோர்களை மதிக்கும் குடும்பம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் அடுத்த தலைமுறையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களை அரவணைத்து தட்டிக் கொடுத்தோம் என்றால் இரண்டு உணர்வுகளும் சேரும்போது இது குடும்பத்திற்கான விஷயம்.

பிள்ளை
என் அப்பாவையும் நான் மதிக்க வேண்டும், என் பிள்ளையையும் நான் மதிக்க வேண்டும். என் பிள்ளையின் உணர்வுகளை நான் ரசிக்க வேண்டும். என் அப்பாவின் உணர்வுகளுக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அதனால் தான் நான் முன்னோடிகளாக கருதும் இயக்குனர்களை அழைத்து வந்துள்ளேன். பாரதிராஜா சார், மகேந்திரன் சார், பாலச்சந்தர் சார், பாலு மகேந்திரா சார், பீம் சிங் சார், பிஆர் பந்துலு சார், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சார், ரவிக்குமார் சார், பாக்யராஜ் சார் இல்லாமல் சினிமா இல்லை.

பணம்
அவர்களை பார்த்து வந்த விழுதுகள் தான் நாங்கள். நமக்கு நிழல் கொடுத்த மரத்தை நினைக்க வேண்டும். சினிமாவை பணம் சம்பாதிக்க மட்டும் பயன்படுத்தாமல் சமூகத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் கனா, மேற்குத்தொடர்ச்சி மலை, டூ லெட், அடங்கமறு, அறம், பரியேறும் பெருமாள் படங்களின் இயக்குனர்கள் கதையால் நின்றிருக்கிறார்கள். அதனால் அவர்களை அழைத்துள்ளேன்.

ரஜினி
மகேந்திரன் சார் வேறு மாதிரி ஆள். நான் வெயிலில் இருந்தால் அவர் மேகம், குளிராக இருந்தால் அவர் போர்வை. அந்த அஸ்வினி வரும்போது மேகம் கடந்து போகும் ஷாட் இன்னும் என் மனதை விட்டு போக மாட்டேன் என்கிறது. உள்ளுக்குள் வேதனையுடன் இருக்கும் பெண்ணுக்கு கடந்து போகும் மேகம் தரும் ஆறுதல் இருக்கே. முல்லும் மலரும் அந்த வின்சு என்கிற ஆபரேட்டர் கதாபாத்திரத்தை இதுவரைக்கும் தமிழ் சினிமா மறுபடியும் பயன்படுத்தவில்லையே. ரஜினி சாரை எனக்கு பிடித்ததற்கு காரணமே மகேந்திரன் சார் படங்கள் தான். எனக்கு ரஜினி சாரின் ஸ்டைல் பிடிக்காது ஆனால் அவரின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். ஒரு மிகச் சிறந்த நடிகர். இவரின் படங்களில் மட்டும் தான் ரஜினி ஒரு நடிகராக வெளியே வந்திருப்பார் என்றார் சேரன்.


Click it and Unblock the Notifications











