“அம்பானிக்குகூட இந்த சுகம் கிடைக்காது”.. ‘சினிமாக்காரன்டா’ கெத்து காட்டும் பாரதிராஜா!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதே பிறப்புதான் வேண்டும் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: அம்பானி போன்ற பணக்கார வாழ்க்கை தனக்கு தேவையில்லை என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் கென்னடி கிளப். மகளிர் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாரதிராஜா, ஒரு கலைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் அம்பானிக்கு கூட கிடைக்காது என்றார்.

கனவு பிரதேசம்:
இதுகுறித்து அவர் பேசியதாவது, "ஒவ்வொரு கலைஞனும் மண்ணையும், தனது பெற்றோரையும், தனது மொழியையும் நேசிக்க வேண்டும். சினிமா என்பது ஒரு கனவு பிரதேசம். அதற்குள் வந்த உடனேயே நாம் பறக்க ஆரம்பித்து விடுவோம். இதுபோன்ற உலகம் வேறு கிடையாது.

அம்பானி வாழ்க்கை:
ஒரு அம்பானிக்கு கூட இந்த சுகம் கிடைக்காது. சினிமா கலைஞனுக்கு மட்டும் தான் கற்பனை சுகம் கிடைக்கும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாரதிராஜா, இயக்குனர் பாரதிராஜாவாக தான் இருக்க வேண்டும். அம்பானி போன்ற வாழ்க்கை எனக்கு வேண்டாம்.

அப்பா ஸ்தானம்:
சுசீந்திரன் ஒரு இயக்குனர் போலவே இருக்க மாட்டார். அவர் ஒரு குடும்ப மனிதர். இந்த படத்தில் நடித்துள்ள பெண்கள், சினிமா வெளிச்சத்தை பார்க்காத கிராமத்து பெண்கள். தொழில்முறை கலைஞர்களைவிட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்களுடைய வாழ்க்கை. என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்து தான் இதில் நடித்துள்ள பெண் பிள்ளைகள் பாத்தார்கள். இது சினிமா அல்ல. வாழ்க்கையின் ஒரு பகுதி. இந்த பெண் பிள்ளைகளின் வாழ்க்கை. கபடிக்காக வாழ்க்கையை அர்பணித்திருக்கிறார்கள்.

குழந்தை மாதிரி:
சசிகுமாரை பார்க்கும் போது ஒரு குழந்தையை பார்ப்பது போல் இருக்கும். ஒரு நடிகன் நடிப்பதே தெரியக்கூடாது. நான் கூட கொஞ்சம் ஓவர் எக்ஸ்பிரஷன் கொடுப்பேன். சசிகுமாரின் நடிப்பு யதார்த்தமாக இருக்கும். சிறு பிள்ளைக்கு கூடசசிகுமாரை பிடிக்கும். சிவாஜி காலத்தில் இருந்து நாங்கள் பழகியது நடிப்பு, எக்ஸ்பிரஷன்ஸ். அதை மாற்ற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவால்:
கிழக்கு சீமையிலே படத்தில் ரஹ்மானுக்கு நான் ஒரு சவால் விட்டேன். நான் சில காட்சிகளை எடுத்துவிட்டு வந்து எடிட் செய்து முடித்த பிறகு பாட்டு போட சொன்னேன். அது தான் 'வண்டி மாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா' பாடல். அதுபோல இந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு இமான் சிறப்பாக இசையமைத்துள்ளார்.

எடிட்டர் ஆண்டனி:
இந்த விழா ஆரம்பிக்கும் முன்னர் நல்ல ஸ்டைலாக ஒரு நபர் என்பக்கத்தில் அமர்ந்திருந்தார். பாப் கார்ன் கொடுத்தார். நானும் யார் என்றே தெரியாமல் அதில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டேன். மேடை ஏறிய பிறகு தான் தெரியும் அவர் தான் எடிட்டர் ஆண்டனி என்பது. எனக்கு எடிட்டர் ஆண்டனியை பற்றி தெரியும் ஆனால் அவரை தெரியாது", என கலகலப்பாக பேசினார் ஆண்டனி.


Click it and Unblock the Notifications











