சூரரைப்போற்று பயணம் என் தந்தை மரணத்திலிருந்துதான் தொடங்கியது..அதை காட்சியாகவே வைத்தேன்..சுதா கொங்கரா
சென்னை: சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக 5 தேசிய விருதுகளை வென்று கொடுத்தார் இயக்குநர் சுதா கொங்கரா.
தற்போது அக்சய் குமார் நடிப்பில் 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், அவர் இயக்கிய படங்கள் குறித்து சுதா தெரிவித்துள்ள கருத்துகள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

10 தேசிய விருதுகள்
சமீபத்தில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழில் இருந்து சூரரைப் போற்று 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள் திரைப்படம் 3 விருதுகளையும், மண்டேலா 2 விருதுகளையும் வென்றன. 3 படங்களும் சேர்ந்து மொத்தம் 10 விருதுகளை வென்று அசத்தியது, தமிழ் திரையுலகிற்கு பெருமையான தருணமாக அமைந்தது.

அசத்திய சூரரைப் போற்று
சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா, சிறந்த பின்னணி இசை ஜி.வி. பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா, ஷாலினி, சிறந்த திரைப்படம் என 5 விருதுகளை வென்றது. ஏர் டெக்கான் உரிமையாளர் கோபிநாத்தின் பயோ பிக் படமாக உருவாகியிருந்த இத்திரைப்படம், நேரடியாக அமேசானில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது.

இந்தியில் சூரரைப் போற்று
'சூரரைப் போற்று' படத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கும் முன்னரே, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யா கேரக்டரில் அக்சய் குமார் கமிட் ஆகியுள்ளார். மேலும், சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளதும் உறுதியாகியுள்ளது. தமிழ் சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால், தற்போது இந்தி ரீமேக்கிற்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. .

அப்பாவின் மரணம்
இதனிடையே தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், அனவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் சுதா. அதில், "சூரரைப் போற்று பயணம் என் தந்தையின் மறைவில் இருந்து தான் தொடங்கியது. அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, வாசலில் நின்றிருந்த என்னை கடைசியாக கையசைத்து கூப்பிட்டார். அதைத்தான் சூரரைப் போற்று படத்திலும் வைத்திருந்தேன். இயக்குநராக சொல்கிறேன், நம்மில் பலர், நம் வாழ்வில் நடந்த சிலவற்றை படத்தில் காட்சியாக வைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் என நினைக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

என் படங்களை நானே பார்க்க மாட்டேன்
சூரரைப் போற்று படத்திற்கு முன்னர், 'துரோகி, இறுதி சுற்று ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இந்நிலையில், நான் இயக்கிய படங்களை திரும்பி பார்க்கும் வழக்கம் எனக்கு கிடையாது என, ரொம்பவே ஓப்பனாக கூறியுள்ளார் சுதா. ஃபைனல் எடிட் முடிந்ததும் ஒருமுறை தான் பார்ப்பேன் எனவும், விதிவிலக்காக 'சூரரைப் போற்று' இந்தியில் ரீமேக் ஆவதால், அதை மட்டும் ஓரிரு முறை பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











