நேர்கொண்ட பார்வையை பார்த்து குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது: பிரபல இயக்குநர்
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தபோது குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது என்று இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ரீமேக் தானே என்று நினைத்து தியேட்டருக்கு சென்றவர்கள் படத்தை பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பிங்க்
பிங்க் திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் செல்லும் திசையெங்கும் அதனைப்பற்றி பேசியிருக்கிறேன். புகழ்ந்திருக்கிறேன். ஒரு திரைப்படம் என்ன செய்யும்? சமுதாயத்திற்கு என்ன செய்து விடமுடியும் என்கிற சமூகத்தின் கேள்விகளுக்கு நோ என்கிற பதிலை திரைப்படம் பெண்கள் சார்பாக சொல்ல முடியும் என்று ஆணித்தரமாக நிருபித்த திரைப்படம்.

பொள்ளாச்சி
டெல்லி மற்றும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு என்னை சுற்றியுள்ள சமூகம் பெண்கள் மீது தான் பழி சொற்களை உதித்த வண்ணம் இருந்தது. அதற்கு சரியான பதில் "நோ". இந்திய சமூகத்தின் பண்பாட்டு தளத்தின் மீது ஏறி உரக்க அதன் கறைகளை களைகிற ஒரு சொல். இந்த திரைப்படம் தமிழில் அதுவும் அஜீத் குமார் அவர்கள் நடிக்க தயாராகப் போகிறது என்ற செய்தியை அறிந்தேன். நல்ல முயற்சி தான் ஆனால் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யும் என்கிற கேள்வி இருந்தது.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்னோட்டத்தில் சண்டைக் காட்சியை பார்த்த போது இயக்குநர் வினோத் அவர்கள் இதை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்று அறிய ஆர்வமானேன், வேலைப்பளு காரணமாக நேற்றிரவு தான் படத்தைப் பார்த்தேன். வீட்டு உரிமையாளரை, அந்த பெண்களை தொந்தரவு செய்யும் பணபலம் மற்றும் அதிகார பலம் படைத்த கும்பல் வக்கீலையும் தொந்தரவு செய்யும் தானே? அப்படி தொந்தரவு செய்கையில் ஒரு சண்டைக்காட்சி வரும் தானே.அஜீத் அவர்களுக்காக செய்த திணிப்பின்றி மிக சரியாகப் பொருந்துகிறது. திரையில் ரசிகர்களின் விசில் பறக்கிறது.

குற்ற உணர்ச்சி
பிங்க் படத்தை பலமுறை பார்த்த போதும் நமக்கு ஏன் இந்த இடம் தோணாமல் போனது. ரீமேக் ஆகிறது என்ற போதும் எல்லோரையும் போல நாமும் ஏன் சந்தேகக் கண்களுடன் பார்த்தோம் என்ற குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. வித்யா பாலன் எத்தனை அழகு. பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் சில காட்சிகளுக்கு மனம் ஏங்கியது.

வித்யா பாலன்
வித்யா பாலனுக்கு ஒரு கதை எழுத வேண்டும் என்று மனம் அடித்து கொண்டது. டர்ட்டி பிக்சர் படத்திலிருந்து வித்யா பாலனின் அபிரிமிதமான நடிப்பை நான் வியந்து பின் தொடர்ந்து இருக்கிறேன். என்ன அபாரமான நடிகை. மிக தாமதமாக தான் திரையுலகில் நுழைந்தார். காலம் இன்னும் இருக்கு என் கைகளில், பார்க்கலாம். தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த அஜீத் இது போன்ற படங்களிலும் நடிக்க முன்வருவது மிக ஆரோக்கியமானது. சிறப்பானது. பாராட்டுக்குரியது. இயக்குநர் வினோத் அவர்களுக்கு என் பாராட்டுகள் என்று வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











