80 சதவிகித திரைப்படங்கள் பெண்களை அப்படிக் காண்பிக்கவில்லை.. சொல்கிறார் 'பொன்மகள் வந்தாள்' ஜோதிகா!
சென்னை: பொன்மகள் வந்தாள் தனது மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கொரோனா
இந்த படத்தை, சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படம் மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அமேசான் பிரைமில் வெளியாகிறது. ஓ.டி.டி.யில் இந்தப் படத்தை வெளியிட தியேட்டர்கள் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

வழக்கறிஞர்
இதற்கிடையே, வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம் பற்றி நடிகை ஜோதிகா,
செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஊட்டி நீதிமன்றத்தில் நடக்கும் கதை. சமூகத்தைப் பாதித்த ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். அது என்ன என்பதை இப்போது சொல்ல இயலாது.

நல்ல கதை
என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கொண்ட கதைகளையே, நடிப்பதற்கு தேர்வு செய்கிறேன். அதனால்தான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடிக்கிறேன். சினிமா, மக்களிடம் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் பொறுப்புணர்வோடு நல்ல கதைகளில் நடிக்கிறேன். பொன்மகள் வந்தாள் என் மனதுக்கு நெருக்கமான விஷயத்தைப் பேசும் படம்.

எனக்கும் பொறுப்பு
பெண்களை, வலுவானவர்களாகவும் கண்ணியமான முறையிலும் சித்தரிக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். 80 சதவித படங்கள், நிஜவாழ்க்கையில் பெண்கள் எப்படி இருப்பார்களோ, அப்படி அவர்களைக் காட்டவில்லை. நான் இரண்டு குழந்தைகளின் தாய் என்பதால் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன்.

வாதாடும் காட்சி
வழக்கமாக, நான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஸ்கிரிப்டை கேட்டுவிடுவேன். இதற்கும் அப்படித்தான். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சி என்பதால், நீண்ட நீண்ட வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதற்காக அதிக ஹோம் ஒர்க் செய்துள்ளேன். நான் நடிக்கும் வித்தியாசமான படங்களுக்கு அமேசான் சிறப்பான தளம் என நினைக்கிறேன்.

ஹீரோவாக உணர்கிறேன்
'சந்திரமுகி 2' படம் பற்றி கேட்கிறீர்கள். அந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக, என்னிடம் யாரும் கேட்கவில்லை. 'சந்திரமுகி' கேரக்டரில் என்னைத் தவிர, சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும். இப்போது எனக்கு 41 வயது. இந்த வயதில் ஹீரோவாக உணர்கிறேன். பயோபிக் கதைகளில் நடிக்க தனக்கு ஆர்வம் இல்லை. இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











