சரத்குமாருக்கும் எனக்கும் சொந்த பிரச்சினையில்லை- விஷால்
சென்னை: எனக்கும் சரத்குமாருக்கும் தனிப்பட்ட விரோதமில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். யாருடைய குடும்பத்தையும் பிரிக்க நினைக்கவில்லை என்றும்,குடும்பங்களை சேர்த்து வைக்கவே தான் தற்போது தேர்தலில் நிற்பதாகவும் சேலத்தில் தெரிவித்துள்ளார். சமரசப் பேச்சுவார்த்தையை தான் மதிப்பதாகவும்,ஆனாலும் சமரசப் பேச்சுவார்த்தையில் தனக்கு உடன்பாடில்லை எனவும் விஷால் கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் தயாராகிவிட்டது. ‘பாண்டவர்' அணியினர் சமாதானத்திற்கு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தனி பேருந்தில் பயணம்
நாடக நடிகர்களே நடிகர் சங்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் என்பதால் அவர்களிடம் ஓட்டு சேகரிக்க திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க விஷால் அணியினர் தனி பேருந்தில் சென்றுள்ளனர்.

பாண்டவர் அணி பட்டாளம்
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி, மற்றும் ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, இ ராஜேஷ், கோவை சரளா, நந்தா, ஸ்ரீமன், ரமணா, பிரசன்னா, உதயா, பூச்சி முருகன், சங்கீதா, சோனியா உள்ளிட்ட செயற்குழு பதவிகளுக்கு போட்டியிடும் 24 பேர் அந்த பேருந்தில் சென்றுள்ளனர். அவர்களுடன் ஆதரவு நடிகர்களும் செல்கிறார்கள். மொத்தம் 40 பேர் சென்றுள்ளனர்.

சேலத்தில் பேட்டி
இவர்கள் 4 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துக் கூட்டங்கள் நடத்தி நாடக நடிகர்களிடம் ஓட்டு கேட்கின்றனர். சேலத்தில் நாடக நடிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்ட விஷால் செய்தியாளர்களிடம் பேசினார்.

சமரசம் கிடையாது
நடிகர் சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவே நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றார் சரத்குமார் அணியினரின் சமரசப் பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளித்த விஷால், அவர்களுடைய சமரசப் பேச்சுவார்த்தையை தான் மதிப்பதாகவும்,ஆனாலும் சமரசப் பேச்சுவார்த்தையில் தனக்கு உடன்பாடில்லை எனவும் கூறினார்.

ஜனநாயக உரிமை
தேர்தலில் பங்கு கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை என கூறிய விஷால்,அவ்வாறு தேர்தலில் நிற்பது குற்றம் என்றால்,அந்த குற்றத்தை தான் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

சொந்தப்பிரச்சினையில்லை
தன்னுடைய சொந்தப் பிரச்னை தொடர்பாகத்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த விஷால் நினைப்பதாக சரத்குமார் அணியினர் அண்மையில் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்த விஷால், தான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்க நினைக்கவில்லை என்றும்,குடும்பங்களை சேர்த்து வைக்கவே தான் தற்போது தேர்தலில் நிற்பதாகவும் தெரிவித்தார்.

மனசாட்சிப்படி ஓட்டு போடுங்க
எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ஆனால்,மனச்சாட்சிக்கு உகந்து வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். கமல்ஹாசன், குஷ்பு வெளிப்படையாக தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் விஷால் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











