இசையமைப்பாளரை திட்டி எழுதிய காதல் பாடல் ஹிட் ஆனது... யுகபாரதியின் சீக்ரெட்
சென்னை: 90's kids-களை கவர்ந்த பல இசையமைப்பாளர்களில் வித்யாசாகர் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. 90-களில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பல ஹிட் ஆல்பம்களை கொடுத்துள்ளார்.
மாஸான ஹீரோக்களுக்கு அறிமுகப் பாடல்களை மாஸாக கொடுப்பதில் வல்லவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் யுகபாரதி அவர்கள்.
இவருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகருக்கும் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை யுகபாரதி பகிர்ந்துள்ளார்.

வித்யாசாகர்
1980-களிலேயே அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் அவருக்கு பிரேக் கொடுத்த படம் ஜெய் ஹிந்த். அதன் பின் கர்ணா, வில்லாதி வில்லன் படங்கள் மூலம் ஹிட் இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துவிட்டார். ஆரம்ப காலத்தில் நடிகர் அர்ஜுன் நடித்த நிறைய படங்களுக்கு இசையமைத்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் இசையமைத்துவிட்டார். அவர் இசையமைத்த மலரே மௌனமா பாடல் பாடகர் SPB அவர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பிடித்த பாடல் ஆனது.

யுகபாரதி
இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடல் மூலம் அறிமுகமாகி, அதன் மூலமே பிரபலமும் ஆனவர்தான் யுகபாரதி. பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனதும், வாய்ப்புகள் வந்து குவியப் போகிறது என்றிருந்தவருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்பே இல்லையாம். மீண்டும் லிங்குசாமி ரன் படத்தை இயக்கியபோதுதான் யுகபாரதிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வித்யாசாகர் - யுகபாரதி சந்திப்பு
லிங்குசாமி யுகபாரதியை வித்யாசாகரிடம் அழைத்துச் செல்ல, ஹிட் பாடல் கொடுத்துவிட்டோம் என்ற மமதையில் சென்றாராம். அதனை கவனித்த வித்யாசாகர், தம்பி என்ன பாட்டு எழுதி இருக்காப்ல? பல்லாங்குழி வட்டம் இல்லையே குழி வட்டமாயிற்றே? இந்தப் பையன்தான் பாடல் எழுத வேண்டுமா போன்ற பல கேள்விகளை லிங்குசாமியிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு, நீ காதல் பாட்டு எழுத வேண்டும். அதில் அன்புள்ள, நலமா, கண்மணி, தென்றல் இது போன்ற எந்தச் சொற்களும் வரக் கூடாது என்று கண்டீஷன் போட்டாராம் வித்யாசாகர். கடுப்பான யுகபாரதி, வாய்ப்பு தரப் போவதில்லை என்று கருதி, லிங்குசாமியிடம், இசையமைப்பாளரை மாற்றிவிடுங்கள் என்று கூறிவிட்டு கோபமாக சென்றுவிட்டாராம்.

யுகபாரதியின் பதிலடி
வீட்டிற்கு சென்றவரை சமாதானப்படுத்தி பாடல் எழுதச் சொன்னாராம் லிங்குசாமி. விரக்தியின் உச்சத்தில் இருந்தவர் காதல் பிசாசே பாடலை எழுதியுள்ளார். குறிப்பாக வித்யாசாகர் மேல் இருந்த கோபத்தை வரிகளாக மாற்றி அவரை திட்டும் வகையில் ஒரு காதல் பாட்டை எழுதி எடுத்துச் சென்றாராம். அதனை வாங்கிப் படித்தவர், யுகபாரதியை வெகுவாக பாராட்டி இனி நான் இசையமைக்கப் போகும் அனைத்து படங்களிலும் நீ பாடல் எழுதப் போகிறாய் என்று கூறினாராம். கிட்டத்தட்ட 300 பாடல்கள் வித்யாசாகருக்கு மட்டும் எழுதியுள்ளாராம் யுகபாரதி.


Click it and Unblock the Notifications











