மணிரத்னம் என்ன கிழிச்சிருவாருன்னு பாக்க போனேன்... பார்த்திபன் பளிச் பேட்டி
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார் பார்த்திபன்.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் என்றே கூறலாம்.
வழக்கம்போல சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் சுவாரசியமாக அந்தப் படத்தை பற்றி பேசி இருக்கிறார்.

ஒரு லட்சம் செலவு
நேற்றுதான் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் சத்தியம் திரையரங்கில் சிறப்பு காட்சியை பார்த்தார்கள். எதையுமே வித்தியாசமாக செய்யக் கூடிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சியை சோழர்கள் வாழ்ந்த தஞ்சாவூரில் சென்று பார்த்துள்ளார். தன்னுடன் இருப்பவர்களையும் அழைத்துச் சென்று கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து அந்தப் படத்தை அங்கு பார்த்துள்ளாராம்.

ஐஸ்வர்யாவிற்கு குடுப்பனை இல்லை
சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். ஒரு வேளை பெரிய பழுவேட்டரையராக நடித்திருக்கலாம் என்று நினைத்தீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தில் சிறிய வேடத்திற்கு என்ன வரவேற்பு கிடைத்து விடப் போகிறது என்று நினைக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு நடித்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தனக்கு கால் செய்து பாராட்டியதாகவும் பெரிய பழுவேட்டரையராக நீங்கள் நடித்திருக்கலாம் என்ற கூறியதாகவும் சொன்னவர் பாவம் ஐஸ்வர்யா ராய்க்கு தான் என்னுடன் நடிக்க குடுப்பனை இல்லை என்றும் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றவர் என்னுடன் நடிப்பதை மிஸ் செய்து விட்டார் என்றும் தனக்கே உரிய பாணியில் கூறியுள்ளார்.

கற்புக்கரசன்
சமீபத்தில் இந்தப் படத்தின் ஒரு நிகழ்வில் பேசும்போது, நானே வருவேன் என்று அடம் பிடித்துதான் வந்தேன் என்று பொடி வைத்து பேசியிருந்தார். பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு வழிவிடும் பொழுது வேண்டுமென்றே நானே வருவேன் திரைப்படத்தை தனுஷ் வெளியிடுவதாக ஒரு விமர்சனம் இருந்தது. அதை கிண்டல் செய்யும் வகையாகத்தான் பார்த்திபன் அப்படி பேசினார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் நான் எதார்த்தமாகத்தான் நானே வருவேன் என்று ஆரம்பித்தேன். ஆனால் அந்த அரங்கம் கொடுத்த ஒரு விதமான வரவேற்பினால் சில விஷயங்களை கூடுதலாக பேசி விட்டேன் என்கிற தொனியில் கூறியுள்ளார். அது மட்டுமின்றி செல்வராகவன் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கொடுத்துள்ளார். நடிகர் தனுஷின் முதல் படத்திலிருந்து நான் அவருக்கு ரசிகர். அது மட்டுமின்றி தயாரிப்பாளர் தாணுவிற்கு உடனே கால் செய்து சார் படத்தை புரமோட் செய்யும் வகையில்தான் பேசினேனே தவிர தப்பாக கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பேசவில்லை. நான் கற்புக்கரசன் சார் என்றெல்லாம் அவரிடம் நிரூபித்தேன் என்றார் பார்த்திபன்.

என்ன கிழிச்சிருவாரு
இயக்குநர் மணிரத்தினம் எப்போதுமே தனது படங்களில் குறுகிய வசனங்களைத்தான் வைப்பார். அப்படி இருக்கையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவர் எடுக்கப் போகிறார் என்றதும் எப்படி வரலாற்று வசனங்களை இவர் கையாள போகிறார், என்ன கிழிச்சிடுவார் என்று நினைத்தேன். என்னை நடிக்க அழைத்தபோது கூட முதலில் செந்தமிழில் பேசி காட்டினேன். ஆனால் அவர் சாதாரணமாக பேசுங்கள் என்று அறிவுறுத்தினார். அப்போதே இந்தப் படம் இப்போதுள்ளவர்களுக்கு புரிந்துவிடும் என்று கணித்து விட்டேன். அதுமட்டுமின்றி அவர் வசனங்கள் சொல்லிக் கொடுத்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று பலருக்கும் படம் புரிவதற்கு காரணம், இப்போது உள்ளவர்களுக்கும் புரியும் வகையில் வசனம் இருக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு தான் என்று பார்த்திபன் பாராட்டி பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











