20 வருஷமா பார்த்திபன எனக்கு தெரியும்..இரவின் நிழல் வெற்றிக்கு காரணம் சொன்ன ஆர்ட் டைரக்டர்!
சென்னை: பார்த்திபனை தனக்கு 20 வருடங்களாக தெரியும் என்று இரவின் நிழல் ஆர்ட் டைரக்டரான விஜய் முருகன் கூறியுள்ளார்.
Recommended Video
பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த விஜய் முருகன் இரவின் நிழல் படத்தில் தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
பார்த்திபனுடன் பணியாற்றிய அனுபவத்தையும் , இரவில் நிழல் படத்தைப் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

இரவின் நிழல்
ஜூலை 15ஆம் தேதி வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வித்தியாசம் என்றால் பார்த்திபன், பார்த்திபன் என்றால் வித்தியாசம், அதை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் படத்தை எழுதி இயக்கியுள்ள பார்த்திபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . அவருடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகடா, பிரியங்கா போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான்.

நந்துவின் வாழ்க்கை
நந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். நந்து சிக்கலில் மாட்டிக் கொள்ள, இவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக துரத்துகின்றனர். போலீஸிடம் இருந்து தப்பிக்க போலி சாமியாரான ரோபோ ஷங்கரிடம் உதவி கேட்கப்போன நந்துவுக்கு என்ன சிக்கல் ஏற்படுகின்றது, பிறகு என்ன நடக்கின்றது என்பதே இரவின் நிழல் படத்தின் கதை. தான் செய்த குற்றங்கள், கடந்த காலம், நிகழ் காலம், தான் வாழ்க்கையில் கடந்து வந்த பெண்கள் என்று அனைத்தையும் சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளார் பார்த்திபன்.

வித்யாசமான முயற்சி
இந்த படத்தை உருவாக்கிய விதத்தை முதல் 30 நிமிடங்கள் ரசிகர்களுக்காக காட்டியுள்ளார் பார்த்திபன். அந்த 30 நிமிடத்திலேயே ரசிகர்களின் பாராட்டுகளையும் கைதட்டல்களையும் பெறுகிறார். ஒரே ஷாட்டில் படமாக வேண்டும் என்றால் அது நடிக்கும் நடிகர்களுக்கு மட்டும் பெரிய சவால் இல்லை அந்த படத்திற்கு பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த பட குழுவினரும் அதற்காக போட்டுள்ள உழைப்பும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் ஆன விஜய் முருகன் இந்த படத்தின் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

நம்பிக்கை வைத்த பார்த்திபன்
விஜய் முருகன் கூறுகையில் பார்த்திபனை எனக்கு கடந்த 20 வருடங்களாக தெரியும். குடைக்குள் மழை படத்திலிருந்து அவருடன் நான் பணியாற்றுகிறேன். இரவின் நிழல் படம் வெற்றி பெறுவதற்கு பார்த்திபன் என் மேல் வைத்த நம்பிக்கையும் ஒரு காரணம்.
எனது முதல் படமான சார்லி சாப்ளின் தொடங்கி தற்போது இரவின் நிழல் வரை 45 படங்களுக்கு மேல் ஆர்ட் டைரக்டர் ஆக பணியாற்றி உள்ளேன். அதில் ஐந்து படங்கள் நடிகர் பார்த்திபன் இணைந்த படங்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.

கடும் முயற்சி
இரவின் நிழல் படத்திற்கு 60 ஏக்கர் செட் போடப்பட்டதாகவும். 100 நாட்கள் அங்கேயே தங்கி வேலை செய்ததாகவும் கூறியுள்ளார் விஜய் முருகன். இந்த படம் ஒரு புதிய அனுபவம். இதை ஏற்கனவே நான் செய்துவிட்டேன் என்றோ, ஈஸியான வேலை என்றும் யாராலும் சொல்லவே முடியாது, மொத்தத்தில் இது வித்தியாசமான அனுபவம் என்று கூறியுள்ளார். சாதாரண படங்களில் ஏதாவது சீன்களை விட்டு விட்டால், சரியாக வரவில்லை என்றாலோ அதை தனியாக சூட் செய்து சேர்த்து விடலாம் . ஆனால் இந்த படத்தில் அப்படி செய்ய முடியாது. ஒரு முறை தவறு நடந்து விட்டால் அது மொத்த படத்தையும் பாதிக்கும் என்று நாங்கள் கவனமாக இருந்தோம். போட்டது அனைத்தும் செட் போல் தெரியக்கூடாது என்று கவனமாக இருந்தோம், இது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று இரவின் நிழல் படத்தின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் விஜய் முருகன். இவர் இறைவி, கோலி சோடா போன்ற பல படங்களில் முக்கிய வில்லனாக நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











