நானும் பச்சைத் தமிழன்தான்.. எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது - ஏ ஆர் முருகதாஸ்
நானும் பச்சைத் தமிழன்தான், எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது என்றார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘கத்தி'. இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், சமந்தா, ஏ.எல்.விஜய், சௌந்தர்யா ரஜினிகாந்த், தாணு, விக்ரமன், மதன் கார்க்கி, ஆர்யா, சாந்தனு, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.பி.சௌத்ரி, தனஞ்செயன், ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனிருத், தயாரிப்பாளர்கள் கருணாகரண், சுபாஸ்கரண் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

துப்பாக்கியை விட
விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், "நானும் விஜய்யும் இணைந்த முதல் படம் துப்பாக்கி ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதைவிட ரசிகர்களுக்கு பிடித்த படமாக ‘கத்தி' இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. ஆனால் அது சந்தோஷமான அழுத்தமாக இருந்தது.

இவரைத் தெரியலன்னா...
நான் நான்கு நாட்களுக்கு முன்னால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது விஜய் என்னுடனே இருந்து என்னை கவனித்துக் கொண்டார். டாக்டர்கள் வந்து மயக்கத்தில் இருந்த என்னை எழுப்பி இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நான், இவரை தெரியலைனா என் மகனே என்னை அடிப்பான் என்று கூறினேன்.

ஜீவானந்தம் - கதிரேசன்
இப்படத்தில் விஜய், ஜீவானந்தம், கதிரேசன் என்னும் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.
நான் விஜயிடம் துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி ஜீவானந்தம், கதிரேசன் இவர்களில் யாரை பிடிக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் கதிரேசன் பிடிக்கும் என்றார். எனக்கும் கதிரேசன் பிடிக்கும். அதேபோல் உங்களுக்கும் பிடிக்கும்.

பணனத்துக்காக அல்ல
நான் பணத்துக்காக இந்தியில் படம் எடுக்க செல்லவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வரும் ஒருவனால் பாலிவுட்டில் என்ன சாதிக்க முடியும்? என்ற பேச்சு நிலவியது. அதை உடைத்தெறியவே நான் அங்கு படம் எடுத்தேன்.

பச்சைத் தமிழன்
மற்றபடி நானும் விஜய்யும் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. நானும் பச்சை தமிழன் தான். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கு," என்றார்.


Click it and Unblock the Notifications











