தல, தளபதி சேர்ந்து நடிச்சா நான் அந்த படத்தை தயாரிக்க ரெடி: ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ.
சென்னை: அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தான் தயாராக இருப்பதாக அன்பு பிக்சர்ஸ் உரிமையாளரும், திமுக எம்.எல்.ஏ. வுமான ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் படத்தில் மற்றொருவரை கிண்டல் அடிப்பது, பஞ்ச் வசனம் பேசுவது என்று இருந்தனர்.

இந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் தற்போது நல்ல நண்பர்களாகிவிட்டனர். ஒரு காலத்தில் கோபத்தில் கொந்தளித்த அஜீத் தற்போது சாந்தமாகிவிட்டார். அஜீத்தின் குணத்தை விஜய் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை.
இந்நிலையில் அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் நடித்தால் அந்த படத்தை தயாரிக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜய்யின் தலைவா பட ரிலீஸில் பிரச்சனை வந்தபோது அதை ரிலீஸ் செய்ய ஜே. அன்பழகன் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











