தொடர்ந்து துரத்தும் மரண பயம்.. இறந்துவிடும் உணர்வு.. தனது பிரச்னை பற்றி மனம் திறந்த பிரபல நடிகை!
சென்னை: மன அழுத்தம் காரணமாக 2015 ஆம் ஆண்டில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக மன அழுத்தம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சினிமா, விளையாட்டுத்துறை பிரபலங்கள், இந்த பிரச்னையில் அதிகமாக சிக்கி உள்ளனர்.
விளையாட்டுத் துறையில் உள்ள பிரபலங்கள், கடந்த சில வருடங்களாக மன ஆரோக்கியம் பற்றி பேசி வருகின்றனர்.

மன ஆரோக்கியம்
இப்போது இந்த பிரச்னை பற்றி சினிமா துறையினரும் அதிகமாகப் பேசி வருகின்றனர். லாக்டவுன் காரணமாக, இந்தப் பிரச்னையை பல நடிகர், நடிகைகள் சந்தித்து வருகின்றனர். சில நடிகர், நடிகைகள் இதுபற்றி வெளிப்படையாக பேசினாலும் பலர் பேசவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஸ்ருதிஹாசன், மன ஆரோக்கியம் மற்றி பேசியிருந்தார்.

இதற்கான சிகிச்சை
அவர் கூறும்போது, ' இந்த லாக்டவுனில் மன ஆரோக்கியம்தான் மக்களின் உண்மையான பிரச்னை என்று கருதுகிறேன். அவர்கள் இந்த விஷயம் பற்றிப் பேச வெட்கப்படுகிறார்கள். நான் கடந்த மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன். மக்களுக்கும் அதை தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன். அதற்கு தியானம் பேருதவியாக இருக்கிறது' என்று கூறியிருந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
இந்நிலையில் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவரது வீட்டில் இருந்து மன அழுத்தத்துக்கான மருந்து மாத்திரைகளும் டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேரோடும் வீதியிலே
இதற்கிடையே, நடிகை பாயல் கோஷ் தானும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார்.

எதை கண்டாலும் பீதி
அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பிரச்னை, மரண பயம். எதை கண்டாலும் பீதி. எப்போதெல்லாம் இறந்துவிடுவேன் என்று உணர்கிறேனோ, அப்போதெல்லாம் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு ஓடிவிடுவேன். என் குடும்பத்தினர், நண்பர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











