எனக்கு ஷங்கரும் ஒன்றுதான்.. புது இயக்குநரும் ஒன்றுதான் - வைரமுத்து
சென்னை: எனக்கு பெரிய இயக்குநரான ஷங்கரும் ஒன்றுதான், புது இயக்குநரும் ஒன்றுதான். இருவருக்கும் ஒரே மாதிரி உழைப்பைத்தான் தருகிறேன், என்றார் கவிஞர் வைரமுத்து.
ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் நடித்து, ஏ.கே.மைக்கேல் என்ற புது இயக்குநர் இயக்கியுள்ள 'ஈரவெயில்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது.
இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். விழாவில் அவர் கலந்துகொண்டு பேசுகையில், "இங்கே பேசிய அனைவரும் என்னையும், என் எழுத்துக்களையும் புகழ்ந்து சொன்னார்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

குல்சாரை விட...
இயக்குனர் மணிரத்னம், ‘ராவணன்' படத்தை தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கினார். இந்தியில், குல்சார் பாட்டெழுதினார். தமிழில், நான் எழுதினேன். இந்தியும், தமிழும் அறிந்தவர்கள் இரண்டு பாடல்களையும் கேட்டார்கள். இந்தி பாடலை விட, தமிழ் பாடல் சிறப்பாக இருக்கிறதே என்று என்னிடம் சொன்னார்கள்.‘‘இருக்கலாம். குல்சார் என்னை விட சிறந்த கவிஞர். ஆனால் தமிழ், இந்தியை விட சிறந்த மொழி. அதனால் இருக்கலாம்'' என்றேன்.

தமிழுக்கு காணிக்கை
எனக்கு வரும் பெருமைகளை எல்லாம் தமிழுக்கே காணிக்கை ஆக்குகிறேன்.
உணர்ச்சியின் உச்சம்தான் கவிதை. நாற்பது காட்சிகளில் சொல்வதை நான்கு வரியில் சொல்வதுதான் பாட்டு. ஒருவன் கஞ்சன். அதை எப்படி சொல்வது? ‘எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். நாய்த்தோலில் வடிகட்டிய கஞ்சன்' என்று சொல்லலாம். ஆனால் என் நண்பன் ஒருவன் சொன்னான். ‘‘அவன் மகா கஞ்சன். தேனிலவுக்கு கூட தனியாகத்தான் போய் வந்தான்.''

தேடலே பாடலானது
இப்படி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் வெளிப்பாட்டு உச்சம் ஒன்று உண்டு. அந்த உத்தியைத்தான் பல பாடல்களில் நான் கையாளுகிறேன்.‘ஈரவெயில்' படத்துக்கு இயக்குநர் மைக்கேல் உருக்கமான காதல் கதை ஒன்றை சொன்னார். கும்பகோணம் திருவிழா கூட்டத்தில் ஒரே ஒருமுறை பார்த்த பெண்ணை சென்னையில் தேடி அலைகிறான், ஒரு இளைஞன். அந்த தேடலே இந்த படத்தில் ஒரு பாடல் ஆகிறது.
‘‘சென்னை என்பது கட்டடக் காடு...இதிலே என் மலர் எந்த மலர்'' என்று அந்த பாடல் தொடங்குகிறது. அந்த பல்லவியின் இறுதியில் அழுத்தமான ஒரு வரியை எழுதியிருக்கிறேன். ‘‘உன்னைக் காணாவிட்டால் - கடற்கரையோரக் காக்கைகள் சாப்பிடக் கண்களைப் பிய்த்து எறிவேன்'' என்று காதலன் பாடுவதாக எழுதியிருக்கிறேன்.

எல்லோரும் ஒன்றுதான்
பெரிய இயக்குனர்களுக்கு வழங்கும் அதே உழைப்பைத்தான் புதிய இயக்குனர்களுக்கும் வழங்குகிறேன். எனக்கு ஷங்கரும் ஒன்றுதான்... மைக்கேலும் ஒன்றுதான்.

வேண்டுகோள்
இன்று படத் தயாரிப்பு எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் வெற்றியின் விகிதாசாரம் குறைந்து கொண்டே வருகிறது. திரையரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிகிறது. இயக்குனர்கள் நல்ல கதைகளோடு களம் இறங்கினால்தான் வெற்றி காண முடியும். படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள். உங்கள் ஊரில், உங்கள் தெருவில், அடுத்த வீட்டில் கற்பனைக்கு சிக்காத ஆயிரம் நிஜ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையுள்ள திரைப்படத்தில் உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி உள்ள திரைப்படம் வெற்றி பெறும்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











