சிவகார்த்திகேயனை கூப்பிட மாட்டேன் என்றேன் - உண்மையை உடைத்த ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை: ஆகஸ்ட் 16 - 1947 இசை வெளியீட்டு விழாவுக்கு சிவகார்த்திகேயனை கூப்பிட ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் மறுத்துவிட்டாராம்.
கோலிவுட்டின் நவரச நாயகன் என அழைக்கப்பட்டவர் நடிகர் கார்த்தி. அவரது மகன் கௌதம் கார்த்திக். இவரும் தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை பெரிதாக எந்த திருப்புமுனையும் அவருக்கு கிடைக்கவில்லை.

மணிரத்னம் அறிமுகப்படுத்திய கௌதம் கார்த்திக்
மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் திரையுலகில் கௌதம் கார்த்திக் அறிமுகமானவர். அறிமுகமே இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மணிரத்னத்தின் இயக்கத்தில் நடந்ததால் கௌதம் கார்த்திக் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடல் படம் படுதோல்வியை சந்தித்ததால் அதற்கு அடுத்ததாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்படியே அவர் நடித்தாலும் அந்தப் படங்களும் ஹிட்டாகவில்லை.

ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கும் புதிய படம்
இதற்கிடையே ஹீரோவாக நடிப்பதற்கு ஆகஸ்ட் 16 - 1947 என்ற படத்தில் கமிட்டானார் கௌதம் கார்த்திக். பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய என்.எஸ். பொன்குமார் இயக்கியிருக்கிறார். ஷான் ரால்டன் படத்துக்கு இசையமக்க அறிமுக நடிகை ரேவதி நடித்திருக்கிறார்.

வரவேற்பைப் பெற்ற ஆகஸ்ட் 16 - 1947 ட்ரெய்லர்
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. வெள்ளைக்காரர்களிடம் இந்தியா அடிமையாக இருந்தபோது நடந்த பிரச்னை குறித்து படம் அமைந்திருப்பதும்; கௌதம் கார்த்திக் போராட துடிக்கும் இளைஞராகவும் நடித்திருக்கிறார் எனவும் ட்ர்யெலரை பார்க்கும்போது தெரிகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது. குறிப்பாக பீரியட் பிலிம்க்கான மேக்கிங் சிறப்பாக இருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது எனவும்; இந்தப் படம் கௌதம் கார்த்திக்கிற்கு ஹிட் படமாக அமையும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரமாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழா
ஆகஸ்ட் 16 - 1947 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர் பொன்குமார், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சிவகார்த்திகேயனை கூப்பிட மறுத்த முருகதாஸ்
இந்த விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், "ஆகஸ்ட் 16 - 1947 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிவகார்த்திகேயன் வந்ததை அடுத்து இந்த நிகழ்ச்சி வேறு பரிணாமம் அடைந்திருக்கிறது. முதலில் இந்த விழாவிற்கு சிவகார்த்திகேயனை நான் கூப்பிட மாட்டேன் என படக்குழுவிடம் சொன்னேன். ஏனென்றால் நான் கூப்பிட்டு அவர் வரமுடியாது என்று சொல்லிவிட்டால் எனக்கு ஹர்ட் ஆகிவிடும். எனவே நீங்களே கூப்பிடுங்கள் என படக்குழுவிடம் சொன்னேன்.
அவர்கள் கூப்பிட்டு சிவகார்த்திகேயன் ஒத்துக்கொண்ட பிறகுதான் அவருக்கு நன்றி சொல்லி மெசேஜ் செய்தேன்" என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











