நான் அப்படி இருந்திருக்கலாம் - பிரசாந்த் கேள்விக்கு மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரசாந்த் எழுப்பிய கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்திருக்கிறார்.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் காதலால் அந்த வேலையை உதறிவிட்டு இயக்குநராக மாறியவர். இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட்டாகி மோஸ்ட் வாண்டட் இயக்குநராகி இருக்கிறார் லோகேஷ்.

மாநகரம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ்
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட லோகேஷ் கனகராஜ் வங்கியில் நல்ல பணியில் இருந்தவர். சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அதன் பிறகு சினிமாவுக்குள் நுழைய முடிவெடுத்த அவர், வேலையை விட்டுவிட்டு மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்தடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ்
மாநகரம் பெற்ற வெற்றியை அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குநர் வரிசைக்கு நகர்ந்தார். அடுத்ததாக அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம் படங்களும் ஹிட்டாகின. இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

உதவி இயக்குநராக பணியாற்றாத லோகேஷ் கனகராஜ்
சினிமாவில் இயக்குநராவதற்கு உதவி இயக்குநராக இருந்திருக்க வேண்டும் என்ற கலாசாரம் குறும்படங்கள் மூலம் உடைக்கப்பட்டது. அப்படி குறும்படம் எடுத்து கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி மோகன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் நுழைந்தனர். அதேபோல் லோகேஷ் கனகராஜும் ஒரு குறும்படத்தை இயக்கிவிட்டு யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் இயக்குநராக ஜொலிப்பவர். உதவி இயக்குநராக பணியாற்றாவிட்டாலும் சினிமாவில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் அவர் தெரிந்துவைத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறுவதுண்டு.

பிரசாந்த்தின் கேள்விக்கு லோகேஷின் பதில்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம் நடிகர் பிரசாந்த், சினிமாவில் இயக்குவதற்கு உதவி இயக்குநராக இருந்திருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "குறும்படங்கள் மூலம் இயக்குநராகி வென்றவர்கள் இருக்கிறார்கள். நான் யாரிடமும் உதவி இயக்குந்ராக இருந்ததில்லை. ஆனால் என்னுடைய டீம் என்னை முழுமையாக நம்பியது. நான் அப்படி இல்லாவிட்டாலும் எனக்கு 15 உதவி இயக்குநர்கள் தேவைப்படுகிறார்கள். உதவி இயக்குநராக நான் பணியாற்றியிருக்க வேண்டும். அப்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும். நான் அவ்வாறு இருந்திருக்கலாம். அதை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்" என்றார்.

விஜய்யை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்துவருகிறது. இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இந்தப் படம் அக்டோபரில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











