கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்
சென்னை: புத்தருக்கு போதிமரம் போன்று தனக்கு போதை மரத்தடியில் ஞானம் பிறந்ததாக இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
மோத்தி பா. எழுதி, இயக்கியுள்ள கோலா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

கஞ்சா
இந்த படத்தின் ஆரம்பத்திலேயே கஞ்சா என்று வந்தது. ஆஹா என்னடா இது என்று எனக்கு கடுக்குன்னு இருந்தது. இந்த கஞ்சாவால் ஜாகுவார் தங்கம் ரொம்ப கோபப்பட்டார். நானே நிறைய கஞ்சா குடிச்சிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்த ஆர்.பி. விஸ்வம் ராமநாதபுரத்தில் இருந்து கேரம் போர்டு ஆட வருவார். என்னுடைய நாடகத்தில் ஹீரோவாக நடிக்குமாறு கூறி ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன்.

விளையாட்டு
கேரம் போர்டு ஆட வரும்போது விஸ்வம் சிகரெட் பாக்கெட் கொண்டு வருவார். அந்த சிகரெட்டின் முனை மட்டும் வேறு மாதிரியாக இருந்தது. கஞ்சா தூளை உள்ளே போட்டு போட்டு அது அப்படி இருந்தது. நல்லா இருக்கும் குடிங்க என்றார். நான் சிகரெட் பிடிப்பேன், இது பயமாக உள்ளது என்றேன். அது எல்லாம் போகத் தான் இது என்றார். அதன் பிறகு சரி என்று குடித்தால் அது நல்லாத் தான் இருக்கு. ஒரு மாதிரியாக இருக்கு.

கேரம் போர்டு
பின்னர் கேரம் போர்டு ஆடும்போது எல்லாம் அதை குடிச்சிக்கிட்டிருப்போம். சில நேரங்களில் அது ரொம்ப நல்லாவே வேலை செய்யும். நமக்கு இல்லாத ஐடியாக்கள் எல்லாம் வரும். பார்க்கில் தான் வரிசையாக அமர்ந்து கஞ்சா அடிப்போம். அதனுடன் கடலை மிட்டாய், தேன் மிட்டாய் சாப்பிடுவோம். அப்படி அடிக்கும்போது தான் ஒரு நாள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று மனதுக்குள் ஃபீலிங் இருக்கிறது. படிப்பை வேறு விட்டுவிட்டோம். இப்படி இருந்தால் என்னவாகும் என்று தோன்றியது.

போதை மரம்
புத்தருக்கு போதி மரத்திற்கு அடியில் ஞானம் வந்தது போன்று எனக்கு போதை மரத்திற்கு கீழ் வந்தது. நம்ம தப்பு பண்ணுகிறோம், இப்படி இருந்தால் வாழ்க்கையில் ஒன்னும் செய்ய முடியாது என்று கோவையில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னைக்கு வந்த பிறகு விஸ்வம் வந்து என்னிடம் உதவியாளராக இருந்தார். அப்பவும் கஞ்சா வைத்திருந்தார். வேண்டுமா என்று கேட்டதற்கு நான் வேண்டாம் என்றேன். கஞ்சா பழக்கத்தை விட ரொம்ப நாளாச்சு. களவும் கற்று மற என்பது போன்று சில விஷயங்களை கற்றுக்கொண்டு அதை விட்டுவிட்டால் நல்லது என்றார் பாக்யராஜ்.


Click it and Unblock the Notifications











