Blue Sattai Maran: எத்தனை கோடி கொடுத்தாலும்.. ரிஷப் ஷெட்டி குறித்த ப்ளூ சட்டை மாறன் பதிவு!
பெங்களூர்: நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் குவித்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடப்பட்டது.

காந்தாரா படத்தின் முன்கதையாக படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட உள்ளதாக ரிஷப் ஷெட்டி முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
காந்தாரா படம்: கன்னடத்தில் கடந்த ஆண்டில் வெளியானது காந்தாரா படம். 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 400 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான கலெக்ஷனை பெற்றது. மலைக்கிராம மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். பாடல்களும் அதிகமான கவனத்தை ஈர்த்து இயக்குநரும் நடிகருமாக ரிஷப் ஷெட்டிக்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது.

முன்கதையாக உருவாகும் காந்தாரா 2: இந்தப் படத்தின் சிறப்பான வரவேற்பை தொடர்ந்து முதல் பாகத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இதற்கான பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் டீசரும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் முன்கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்க மிகப்பெரிய ஆய்வுகளை மேற்கொண்ட ரிஷப் ஷெட்டி, மிகுந்த முயற்சிக்கு பிறகு ஸ்கிப்டை உருவாக்கியுள்ளார்.
பிரம்மாண்டமான தயாரிப்பு: இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ள நிலையில் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முதல் பாகம் குறைந்த பட்ஜெட்டில் எளிமையாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது பாகம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் ரிஷப் ஷெட்டி: முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கடந்த 27ம் தேதி படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. காந்தாரா -சாப்டர் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் புராணக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச பிலிம் பெஸ்டிவலில் காந்தாரா படம் திரையிடப்பட்டுள்ளது.
பிற மொழிப்படங்களில் நடிக்க மாட்டேன்: இந்நிலையில் கோவா பிலிம் விழாவில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி, தொடர்ந்து மற்ற மொழிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் முன்னணி நடிகர்களின் படங்களும் இதில் அடக்கம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்தப் படங்களின் வாய்ப்புகளை தான் நிராகரித்து விட்டதாகவும் எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் மற்ற மொழிப்படங்களில் தான் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கன்னடத்தில் மட்டுமே படங்களை இயக்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்வளித்த கன்னட ரசிகர்கள்: தனக்கு வாழ்வளித்த கன்னட ரசிகர்களுக்காக தான் எப்போதும் நன்றிக்கடனுடன் இருப்பேன் என்றும் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். பிற மொழிப் படங்களில் இருந்து தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாகவும் ஆனால் தனக்கு மற்ற மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்றும் அவர் மேலும் தெரித்துள்ளார். கன்னடத்தில் தன்னுடைய படங்கள் வெளியானாலும் பிற மொழிகளில் அதை டப்பிங் செய்துக் கொள்ளலாம் என்றும் எமோஷன் எல்லா மொழிகளுக்கும் ஒன்றுதான் அது எல்லோருக்கும் கனெக்ட் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி குறித்த பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











