பொங்கல் ரேஸ் ஆரம்பம்... ஐ, என்னை அறிந்தால், ஆம்பள!
சென்னை: பொங்கலுக்கு எத்தனை படங்கள் வரும் என்பது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று பெரிய படங்கள் இந்தப் பொங்கலை குதூகலப்படுத்த வருகின்றன. அவை ஐ, ஆம்பள மற்றும் அஜீத்தின் என்னை அறிந்தால்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, மிகப் பெரிய வசூலைப் பெற்றுத் தரும் சீஸன் பொங்கல். கிட்டத்தட்ட 10 நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை வருவது இந்த ஒரு சீஸனில்தான்.

சிறப்புக் காட்சிகள்
மேலும் இந்த காலகட்டத்தில் ஒரு வாரம் வரை தினசரி 5 காட்சிகள் மற்றும் சிறப்புக் காட்சிகள் ஓட்டிக் கொள்ள அரசே அனுமதி அளிக்கிறது. எனவே பெரிய நடிகர்களின் படங்கள் இந்த சீஸனைக் குறிவைப்பது வாடிக்கை.

3 பெரிய படங்கள்
இந்தப் பொங்கலுக்கு 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அவை ஷங்கரின் ஐ, அஜீத் நடித்த என்னை அறிந்தால், விஷால் நடித்துள்ள ஆம்பள ஆகியவைதான் அந்த மூன்று படங்கள்.

ஐ
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் ஐ படத்தை இருக்கிற மொத்த அரங்குகளில் 950-லும் போட்டால் கூட, அந்தப் படத்தின் பட்ஜெட் தொகையை வசூலிக்க முடியுமா என்பதுதான் உண்மை நிலை. ஆனால் படம் பிரமாதமாக வந்திருப்பதாக செய்திகள் வருவதால், அந்தப் படத்துக்கு அதிகபட்சமாக 450 அரங்குகள் வரை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

என்னை அறிந்தால்
ஐக்கு சற்றும் சளைக்காத முக்கியத்துவம் கொண்ட படம் என்னை அறிந்தால். காரணம் அது அஜீத்தின் படம். இந்தப் படத்துக்கும் அதிக அரங்குகளை எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் ஐ நெருக்கடி காரணமாக 300 அரங்குகள் வரைதான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆம்பள
சுந்தர் சியின் ஆம்பள படத்துக்கு விஷாலின் டார்கெட்டும் இதே 300 அரங்குகள்தான். எப்படியாவது அதைப் பெற்றுவிடும் முயற்சியில் இப்போதே தீவிரமாகிவிட்டார்.

வேறு படங்கள்?
இந்த மூன்றைத் தவிர வேறு புதிய படங்கள் எதுவும் பொங்கல் ரேசில் குதிக்க வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தாலும் அவற்றுக்கு தியேட்டர்கள் இல்லை!

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்
எப்போதும் இல்லாத அளவுக்கு பொழுதுபோக்கின் உச்சங்களாக இருக்கும் படங்கள் இந்தப் பொங்கலுக்கு வெளியாவதால், ஜல்லிக்கட்டு இல்லாத குறையை இந்தப் பொங்கல் சிறப்புப் படங்கள் தீர்க்கும் என நம்பலாம்!


Click it and Unblock the Notifications











