கோரிக்கையை ஏற்காவிட்டால் ஒடிடிக்கு செல்வோம்..தொழில் சுதந்திரம் எங்களுக்கும் உண்டு..பாரதிராஜா கறார்
சென்னை: எங்கள் கோரிக்கையை திரையரங்கத்தினர் ஏற்காவிட்டால், முழுமையாக ஒடிடி-க்கு செல்வோம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
Recommended Video
பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று நடந்தது.
பார்சன் காம்பளக்ஸில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்தில் இந்தச் சங்கம் செயல்படுகிறது.

கொரோனா காலத்தில்
விழாவில் பாரதிராஜா, டி.சிவா, டி.ஜி.தியாகராஜன், சுரேஷ் காமாட்சி உள்பட பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட படங்களை நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் முதலில் முடித்துக் கொடுக்க வேண்டும். அதை முடித்துவிட்டு அடுத்தப்படத்துக்கு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளோம்.

அடாவடித்தனம்
தியேட்டர்களில் இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஷேர் பற்றி தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு அறிக்கை விட்டிருக்கிறோம். அதை ஏற்க முடியாது என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருப்பது பற்றி கேட்கிறீர்கள். திரைப்படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். நீங்கள் (திரையரங்கத்தினர்) அடாவடித்தனம் பண்ணும்போது எங்களுக்கு வேறு வேறு திசைகள் இருக்கிறது.

உரிமை இல்லை
எங்கள் பொருளை எங்கு விற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை இங்குதான் விற்க வேண்டும் என்று சொல்ல, யாருக்கும் உரிமை இல்லை. 'தியேட்டர்காரர்கள் தங்களுக்கும் தொழில் சுதந்திரம் இருக்கிறது, கல்யாண மண்டபமாக மாற்றுவோம் என்று சொல்கிறார்களே' என்பது கேட்கிறீர்கள். அது அவங்க கட்டிடம். அவங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தொழில் சுதந்திரம்
எங்கள் பொருளை வைத்துதான் ரசிகர்கள் அங்கு வருகிறார்கள். எங்கள் பொருள் இல்லை என்றால் உங்கள் இஷ்டம், எங்களுக்கும் தொழில் சுதந்திரம் இருக்கிறது என்ற அவரிடம், ஒடிடி-க்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் திரையரங்குகளுக்கு கோரிக்கை வைப்பதாகக் கூறப்படுவது பற்றி கேட்டபோது, இல்லை என்ற பாரதிராஜா, நாங்கள் வைத்திருக்கிற கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், நாங்கள் அங்கு போக மாட்டோம். இல்லை என்றால் முழுமையாகச் செல்வோம்.

தேவையில்லாதது
நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக அவர்கள் சொல்வது சரியல்ல, அது அவர்களுக்கு தேவையில்லாதது. பல தியேட்டர்களை சிலர் கைக்குள் வைத்துக்கொண்டு, பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமே வாங்குகிறார்கள். நூற்றுக்கணக்கான சின்ன பட்ஜெட் படங்கள் இருக்கின்றன. அதை வாங்கி திரையிட மறுப்பது ஏன்? என்றும் பாரதிராஜா கேட்டார்.


Click it and Unblock the Notifications











