உச்ச நடிகர்களின் படங்கள் போண்டியானால் அவர்கள்தான் நஷ்டஈடு தரனும்.. தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி!
சென்னை: உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியடைந்தால் அந்த நடிகர்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. அவற்றில் சில படங்கள் மட்டுமே போட்ட பணத்தை திருப்பியெடுக்கும் அளவுக்கு வசூலை பார்க்கின்றனர்.
சில படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு கிளம்பிவந்த சுவடே தெரியாமல் போய்விடுகிறது. போதாகுறைக்கு படம் தியேட்டரில் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளத்திலும் ரிலீஸாகி தயாரிப்பாளரை அதளப்பாதாளத்தில் தள்ளிவிடுகிறது.

திரையரங்க உரிமையாளர்கள்
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, தயாரிப்பாளர் தரப்பும் தியேட்டர் உரிமையாளர்களும் தான். இந்நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

மூடப்படும்
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாதத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டது

வெளியிட மாட்டோம்
அதேபோல் பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் அமேசான், நெட் ப்ளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளத்தில் படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.

நஷ்ட ஈடு
மேலும் உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications











