மீண்டும் தியேட்டர்கள் மூடலா?...பொங்கல் ரிலீஸ் படங்களின் நிலை என்னவாகும் ?
சென்னை : கொரோனா மூன்றாம் அலை பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்ட்டால் பொங்கல் ரிலீசை அறிவித்து விட்டு காத்திருக்கும் படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு ஆகியன அமல்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதல் கட்டுப்பாடுகள் வருமா
மக்கள் கூடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

பின்வாங்கிய மெகா பட்ஜெட் படங்கள்
மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி தமிழகத்தில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஜனவரி 7 ல் ரிலீசாக இருந்த ஆர்ஆர்ஆர், ஜனவரி 13 ல் ரிலீசாக இருந்த அஜித்தின் வலிமை, ஜனவரி 14 ல் ரிலீசாக இருந்த பிரபாசின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முடிவை மாற்றிய சிறிய படங்கள்
பெரிய பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து ஜனவரி 14 ரிலீஸ் என அறிவித்த ஐஸ்வர்ய முருகன் திடீரென ஜனவரி 26 க்கு மாற்றி வைக்கப்பட்டது. சல்யுட் பட ரிலீசும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 9 சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளன.

பொங்கல் ரிலீஸில் 9 படங்கள்
நாய் சேகர், கொம்புவச்ச சிங்கம்டா, என்ன சொல்ல போகிறாய், கார்பன், தேள், மருத, ஏஜிபி, பாசக்கார பய, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் ஜனவரி 14 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இதில் என்ன சொல்ல போகிறாய் படம் குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம். நாய் சேகர் படமும் காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.

படங்களுக்கு சிக்கல் வருமா
ஒருவேளை திட்டமிட்டபடி இந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள். ஏற்கனவே 50 சதவீதம் பார்வையார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கும் தொடரும் என கூறப்பட்டுள்ளதால் அது நிச்சயம் படங்களின் வசூலை பாதிக்கும். வார இறுதி நாள் ஷோவும் இல்லாமல், இரவு நேர ஷோவும் இல்லாமல் இருந்தால் இந்த படங்கள் போட்ட பணத்தை எடுப்பதே பெரும்பாடாகி விடும்.
Recommended Video

கலக்கத்தில் கோலிவுட் வட்டாரங்கள்
ஜனவரி 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை வழிபாட்டு தலங்களிலேயே பொது மக்களுக்கு அனுமதி கிடையாது என சொல்லி விட்டார்கள். அப்படி இருக்கும் போது தியேட்டர்களில் எப்படி அனுமதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் கோலிவுட் வட்டாரங்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











