கால்பந்தாட்ட வீரனின் வாழ்க்கை சம்பவங்களை சொல்லும் க் படம் - பூஜையுடன் தொடங்கியது
சென்னை: கால்பந்தாட்ட வீரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் க் திரைப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தில் நடிக்கும் நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்கவிருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.
ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. அதில் இப்படத்தில் நடிக்கும் நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில முக்கியமான சிறப்பு காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











