Ilaiyaraaja: “பொன்னியின் செல்வன் படத்துல ஒரிஜினல் ஃபீல் வரவே இல்ல..” கொளுத்திப் போட்ட இளையராஜா!
சென்னை: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன், 2022, 2023 ஆண்டுகளில் வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து பேசிய இளையராஜா, பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த ஒரிஜினல் ஃபீல் இல்லை என விமர்சித்துள்ளார்.
பொன்னியின் செல்வனில் ஒரிஜினல் ஃபீல் இல்லை
தமிழ் சினிமாவின் கனவுத் திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், இரண்டு பாகங்களாக வெளியானது. முதல் பாகம் 2022 செப்டம்பரிலும், இரண்டாம் பாகம் கடந்தாண்டும் ரிலீஸாகின. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

மேலும், சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ரகுமான், விக்ரம் பிரபு, ஷோபிதா துலிபலா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால், இரண்டாம் பாகம் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டும் இல்லாமல் கதை, திரைக்கதை, மேக்கிங் போன்றவையும் விமர்சனத்துக்குள்ளாகின.
இதனையடுத்து தற்போது கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். தக் லைஃப் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை இசையமைப்பாளர் இளையராஜா விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இளையராஜா, பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியிருந்தார்.
அதில், பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகங்களாக வெளியாகின. இந்த 5 பாகங்களையும் எத்தனை முறை வாசித்திருப்பேன் எனத் தெரியவில்லை, நான் பாரதிராஜா, பாஸ்கர் என எங்க செட்டில் அனைவரும் போட்டிப் போட்டு பொன்னியின் செல்வனை படித்துள்ளோம். இந்த நாவலில் கல்கியின் எழுத்து தான் எனது கற்பனையை அதிகம் தூண்டி விட்டது. வந்தியத் தேவன் காமெடி, வந்தியத் தேவன் - குந்தவை காதல் காட்சிகள் அவ்வளவு ரசிக்கும் படி இருந்தன.
ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் அந்த ஒரிஜினல் ஃபீல் சுத்தமாக இல்லை. கல்கியின் கற்பனை கொஞ்சம் கூட வரவில்லை, நான் இதனை குறையாக சொல்லவில்லை. பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும் என இளையராஜா விமர்சித்துள்ளார். தமிழில் மணிரத்னம் - இளையராஜா கூட்டணிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் தளபதி படத்திற்குப் பின்னர் இருவரும் இணையவே இல்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் குறித்து இளையராஜா விமர்சனம் செய்துள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











