Ilaiyaraaja: "அப்பான்னு கூப்பிடாத..” ஆர்டர் போட்ட இளையராஜா... அழுத மிஷ்கின்... அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: தமிழில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தில் கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் இளையராஜா பற்றி மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது.
அதில், இளையராஜாவுடனான மோதல் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இளையராஜாவால் தேம்பித் தேம்பி அழுத மிஷ்கின்
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ படங்கள் இயக்கியுள்ளார். தமிழில் சைக்கோ த்ரில்லர் ஜானர் படங்களின் ஸ்பெஷலிஷ்ட் என்றால் அது மிஷ்கின் தான் என்பது ரசிகர்கள் அறிந்ததே.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தற்போது பல படங்களில் முகம் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயனின் மாவீரன், விஜய்யின் லியோ படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார். இந்நிலையில் மிஷ்கினின் சமீபத்திய பேட்டியில், இசையமைப்பாளர் இளையராஜா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இளையராஜாவின் தீவிரமான ரசிகர்களில் மிஷ்கினும் ஒருவர். அவருடன் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய படங்களில் மிஷ்கின் பணிபுரிந்துள்ளார்.
ஆனால், அதன்பின்னர் இளையராஜாவுடன் இணையமாட்டேன் என மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணம் பற்றி பேசிய மிஷ்கின், "ஒருநாள் இளையராஜா இனிமேல் தன்னை அப்பான்னு சொல்லாத என ஆர்டர் போட்டார். அதைக் கேட்டதும் இளையராஜா ஸ்டூடியோ வாசலிலேயே நின்று தேம்பித் தேம்பி அழுதேன். அதன்பிறகு அவரை ஐய்யா என்றுதான் கூப்பிட்டேன்" என்றுள்ளார்.
"சைக்கோ படத்தின் 'உன்ன நெனச்சு' பாடல் கம்போஸ் செய்யும் போது அந்த ட்யூன் வாங்க 6 நாட்கள் ஆனது. எனக்கு திருப்தியில்லை என சொன்னதால் இளையராஜா டென்ஷன் ஆகிவிட்டார். அதன்பிறகு அவரிடம் சரியான உதாரணம் சொல்லிதான் அந்தப் பாடலை வாங்கினேன். ஆனால், அந்தப் பாடலுக்கு கபிலன் எழுதிய வரிகள் நல்லா இல்லைன்னு சொன்ன இளையராஜா, அவரே சொந்தமாக பாடல் எழுதினார்."
"ஆனால், இளையராஜாவின் வரிகள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல், அந்தப் பாடலை சித் ஸ்ரீராம் தான் பாட வேண்டும் என சொன்னேன். அதற்கு அவர் உடன்படாமல் இன்னொரு பாடகரை வைத்து ரெக்கார்டு செய்து கொடுத்தார். ஆனால், நான் இளையராஜா அவரது ஸ்டூடியோவில் இல்லாத நேரத்தில் சித் ஸ்ரீராமை அழைத்து பாட வைத்தேன். அதனால் இளையராஜாவுக்கு என்மீது கோபம்."
"அப்போதே என்னை அழைத்து இனி நாம் சேர்ந்து பணிபுரிய வேண்டாம் என இளையராஜா சொல்லிவிட்டார். அவர் அப்படி கூறுவார் என நானும் எதிர்பார்த்தது தான். அதனால் தான் இளையராஜாவுடனான பயணம் முடிவுக்கு வந்தது" என மிஷ்கின் கூறியுள்ளார். மேலும், நான் இளையராஜாவின் ரசிகனாக இருந்தாலும், என் படம் என வரும் போது ஒரு இயக்குநராக தான் அவரிடம் இசை கேட்க வேண்டும். அவரும் அப்படித்தான் இசை கொடுக்க வேண்டும்.
நான் சொல்வதை விட இளையராஜா சொல்வது தான் கரெக்டாக இருக்கும் என எனக்கும் தெரியும். ஆனால் எனது படத்துக்கு நான் எதிர்பார்க்கும் இசை தான் வேண்டும். இனி என்னை அப்பான்னு கூப்பிடாத என இளையராஜா சொன்ன போதும், நாம் சேர்ந்து படம் பண்ண வேண்டாம் என அவர் சொன்ன போதும் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மிஷ்கின் மனம் திறந்துள்ளார். மிஷ்கினின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











