Ilaiyaraaja: திட்டினாலும் ரசிகர்களை சரியாக டீல் செய்த இளையராஜா... ரஹ்மான் தான் வசமா சிக்கிட்டார்
சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன.
முக்கியமாக ஏஆர் ரஹ்மான் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இன்னொருபக்கம் ஏஆர் ரஹ்மானை விட இளையராஜா தான் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இசை கச்சேரிகளின் போது ரசிகர்களை திட்டினாலும், இளையராஜா சரியாக டீல் செய்வார் என கூறி வருகின்றனர்.

ரஹ்மானை விட இளையராஜா பெஸ்ட்: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. சென்னை ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், ஏற்பாடுகள் சரியாக செய்யாததால், ரசிகர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் விரக்தியோடு வெளியேறினர். அதுமட்டும் இல்லாமல் ஈசிஆர் பகுதி முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதோடு, ஏஆர் ரஹ்மானுக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு ஆதரவாக பலரும், எதிராக சிலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இந்த சம்பவத்திற்காக ஏஆர் ரஹ்மான் மன்னிப்புக் கோரியதோடு, நிகழ்ச்சியை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றார். அதன்படி, முதற்கட்டமாக 4000 பேருக்கு டிக்கெட் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் மீது மத ரீதியாகவும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல், இளையராஜாவை முன்வைத்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது இசை கச்சேரிகளை நடத்துவதில் இளையராஜா தான் பெஸ்ட் என கூறி வருகின்றனர். இளையராஜா தனது கச்சேரிகளில் ரசிகர்கள் அதிகமாக கூச்சலிட்டாலோ, விசிலடித்தாலோ அவர்களை அங்கேயே கண்டிப்பார். பாடலை முழுமையாக ரசிக்காமல் மற்றவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது என ரசிகர்களை பலமுறை கண்டித்தது உண்டு.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களாக இருந்தாலும், தனது இசைக் கச்சேரிகளில் அதிகம் பேசவிடமாட்டார் இளையராஜா. குறிப்பாக ஒருமுறை இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர் மேடையேறினார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணி, ஷங்கர் - இளையராஜா கூட்டணியை எப்போது எதிர்பார்க்கலாம் என, இயக்குநர் ஷங்கரிடம் கேட்டார். அதற்கு உடனடியாக "ஏன் எனக்கு வாய்ப்பு கேக்குறீயா" என ரோகிணியிடம் கோபம் கொண்டார் இளையராஜா.
அதேபோல், இன்னொரு இசை நிகழ்ச்சியில், 500 ரூபாய் டிக்கெட் எடுத்த ரசிகர்கள், ரூ.10000 டிக்கெட்டுகளுக்கான முன் வரிசையில் அமர்ந்தனர். இதனைப் பார்த்த இளையராஜா, இசை நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேடையில் இருந்தபடியே அந்த ரசிகர்களை கண்டித்தார். இப்படியெல்லாம் செய்தால், இருக்கைகள் கிடைக்காத ரசிகர்கள் என்னைத்தானே திட்டுவார்கள் என ஆதங்கப்பட்டார். அதேபோல், அரங்கிற்குள் எத்தனை பேர் அமர முடியுமோ, அதற்கேற்ற எண்ணிக்கையில் தான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டுவிடுவாராம்.

இப்படி எந்த இசை நிகழ்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை கண்டிப்புடன் சரியாக டீல் செய்வதில் இளையராஜா தயங்கவே மாட்டார். இதனால் பலமுறை அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும், ரசிகர்களை இளையராஜா மரியாதையாக நடத்துவதில்லை எனவும் விமர்சனங்கள் சொல்லப்பட்டன. ஆனாலும், அதையெல்லாம் இளையராஜா பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தனது இசை நிகழ்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பார்.
இளையராஜாவின் இந்த கண்டிப்பை விமர்சனம் செய்தவர்கள், இப்போது ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை பார்த்து தங்களது முடிவினை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. தனது இசை நிகழ்ச்சியை எல்லோரும் கண்டுகளிக்க வேண்டும் என்பதில், இளையாராஜா ரொம்ப கவனமாக இருந்துள்ளார். அதனால் தான் அவரது இசை நிகழ்ச்சிகளில் இதுவரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











