பிரதமர் மோடி தாயாரின் ஆன்மா சாந்தியடைய இளையராஜா தீபம் ஏற்றி வழிபாடு!
சென்னை : பிரதமர் மோடி தாயாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் இளையராஜா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.
பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். தாயின் உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கில் மோடி கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு ஜப்பான் பிரதமர், நேபாளத்தின் பிரதமர், மத்திய அமைச்சர்கள், குஜராத் முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்,திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்திருந்தனர்.

பிரதமர் மோடியின் தாயார்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ந் தேதி யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், நேற்று அதிகாலை 3.39 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள்
இதையடுத்து, பிரதமர் மோடி குஜராத்திற்கு விரைந்து சென்று தாயார் ஹீராபென்னுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, மோடி உருக்கமான ட்வீட் பதிவில், ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா, ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது என குறிப்பிட்டிருந்தார்.

எதையும் எதிர்பார்க்காத தாய்
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார். அதில், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைகிறேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவுமே கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறேங்கும் காணமுடியுமோ? அவர் மறைந்தது துயரமே நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்குகொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எழுதி இருந்தார்.

தீபம் ஏற்றி வழிபாடு
மேலும், பிரதமர் மோடி தாயாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











