Ilaiyaraaja Maniratnam: இளையராஜாவும் மணிரத்னமும் சண்டை போட்டு பிரியல... அந்த இயக்குநர் தான் காரணமா?
சென்னை: முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதேபோல், அவரது நண்பரான இயக்குநர் மணிரத்னம் தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இந்த இருபெரும் ஆளுமைகளும் ஆரம்பத்தில் ஒன்றாக பயணித்தனர்.
ஆனால், தளபதி படத்திற்குப் பின்னர் இளையராஜாவும் மணிரத்னமும் பிரிந்தனர்.
அவர்களின் பிரிவுக்கு மறைந்த பிரபல இயக்குநர் ஒருவரே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இளையராஜா மணிரத்னம் பிரிய காரணமான இயக்குநர்:ரசிகர்களின் இசைஞானி இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதேபோல், முன்னணி இயக்குநரான மணிரத்னம் அவரது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
1983ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பல்லவி அனு பல்லவி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். அன்னக்கிளி படத்தில் அறிமுகமான இளையராஜா செம்ம பீக்கில் இருந்த காலக்கட்டது அது. முதல் படத்திலேயே இளையராஜாவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். அப்போதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு மலர, தொடர்ந்து இக்கூட்டணியில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகின.
பகல் நிலவு, இதய கோவில், மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, தளபதி என ஒவ்வொரு படத்திலும் புதிய இசை அனுபவத்தை கொடுத்தனர். இவைகளில் மெளன ராகம், நாயகன், தளபதி படங்களின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவைரட்டாக காணப்படுகிறது. ஆனால், தளபதி படத்திற்குப் பின்னர் இளையராஜா மணிரத்னம் கூட்டணி பிரிந்தது.
1992ல் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இளையராஜாவிடம் கீபோர்டு பிளேயராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மணிரத்னம் இளையராஜா இருவரும் பிரிய அவர்களுக்குள் இருந்த ஈகோ தான் காரணம் என சொல்லப்பட்டது. அதனால் தான் இருவரும் சண்டைப்போட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அதன்பிறகு மணிரத்னம், இளையராஜா இருவரும் எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் சந்தித்துக்கொண்டது இல்லை என்பதால், அவர்களுக்குள் ஈகோ இருப்பதாகவே ரசிகர்களும் நம்பினர். ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் மணிரத்னம் கலந்துகொண்டார். அப்போது மேடையேறிய அவரிடம், "என்ன மணி வயசாகிடுச்சா" எனக் கேட்டு இளையராஜா பங்கமாக கலாய்த்தார். இந்த வீடியோ இப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி படத்திற்குப் பின்னர் பிரிந்தாலும் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்நிலையில், இளையராஜாவை விட்டுவிட்டு ஏஆர் ரஹ்மானிடம் போனதற்கான காரணம் என்னவென்று மணிரத்னமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில், தளபதிக்குப் பின்னர் தான் இயக்கிய ரோஜா படத்தை இயக்குநர் கே பாலச்சந்தர் தான் தயாரித்தார்.
ஆனால், அப்போது கே பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைக் கிடையாது. அதனால் அவர்தான் ரோஜா படத்திற்கு இளையராஜா வேண்டாம் என தன்னிடம் கூறினார். அதனால், இன்னொரு இசையமைப்பாளரை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனக்கு இளையராஜாவை பிரிய மனம் இல்லை என்றபோதும் வேறு வழியே இல்லாமல் தான் ஏஆர் ரஹ்மானிடம் சென்றேன். தனது நண்பர் ஒருவர் தான் ஏஆர் ரஹ்மானை தன்னிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போதும் ரோஜா படத்திற்கு ஏஆர் ரஹ்மானின் இசை செட் ஆகுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், ரோஜா படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதோடு ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருதும் கிடைத்ததால், தான் அவருடனேயே தொடர்ந்து பணியாற்ற தொடங்கிவிட்டேன் என மணிரத்னம் கூறியிருந்தார். இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே பாலச்சந்தர் கறுப்பு வெள்ளை சினிமாவிலேயே பட்டையைக் கிளப்பியவர்.
கே பாலச்சந்தரும் இளையராஜவும் இணைந்து சிந்து பைரவி, புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புது புது அர்த்தங்கள் ஆகிய படங்களில் வேலை பார்த்துள்ளனர். புது புது அர்த்தங்கள் படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் செய்யும் போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தான் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இளையராஜாவை வேண்டாம் என கே பாலச்சந்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











