Ilaiyaraaja: போற்றிப்பாடடி பாடல்... இளையராஜா மட்டும் தான் இப்படியா..? ஏஆர் ரஹ்மானை யாருமே கேக்கலையே
சென்னை: உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் பட சர்ச்சையை கிளப்பினார்.
அதில் போற்றிப்பாடடி பெண்ணே பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவையும் இந்த சர்ச்சையில் இழுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ஏஆர் ரஹ்மானும் இதேபோல் ஒரு பாடலுக்கு இசையமைத்ததை ஏன் கேள்விக் கேட்கவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.
ஏஆர் ரஹ்மானை வம்பிழுக்கும் இளையராஜா ரசிகர்கள்:உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமலின் தேவர் மகன் படம் குறித்து பேசினார்.

தேவர் மகனில் வரும் இசக்கி பாத்திரம் தான் மாமன்னன் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் எனக் கூறினார். மேலும், தேவர் மகன் படம் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் மாமன்னன் படத்தை இயக்கியதாகவும் பேசினார். முக்கியமாக இந்தப் பேச்சில் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற 'போற்றிப்பாடடி பெண்ணே' என்ற பாடலையும் மாரி செல்வராஜ் குறிப்பிட்டு இருந்தார்.
மாரி செல்வராஜின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், தற்போது இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர். அதில், கமல்ஹாசனை கேள்விக் கேட்கும் மாரி செல்வராஜ், 'போற்றிப்பாடடி பெண்ணே' பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவை ஏன் எதுவும் கேட்கவில்லை. தேவர் மகன் மட்டும் இல்லாமல் சின்ன கவுண்டர், எஜமான் என பல படங்களுக்கு இளையராஜா இப்படி இசையமைத்துள்ளாரே எனக் கேட்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் நியாயமாக இந்த கேள்வியை இளையராஜாவிடம் கேட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பியதால், அவரது ரசிகர்கள் தற்போது ஏஆர் ரஹ்மானையும் இதில் கோர்த்துவிட்டுள்ளனர். ராஜாவுக்கு எதிரான சர்ச்சைகளில் மட்டும் பலரும் விமர்சிப்பதாக கூறியுள்ள அவர்கள், ஏஆர் ரஹ்மானை யாரும் எதுவும் சொல்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அதாவது பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் ஹீரோவாக நடித்த படம் தாஜ்மஹால். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா' என்ற பாடலும், சாதிய பெருமை பேசும் விதமாக உருவாகியிருக்கும். இந்தப் பாடலுக்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்தார். அவர் இப்படியொரு பாடலுக்கு இசையமைத்திருக்கலாமா, இளையராஜா செய்தது தவறு எனில், ஏஆர் ரஹ்மானும் இப்பாடலுக்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும் என பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். இது தற்போது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











