'அன்னக்கிளி'யில் இருந்து.. இளையராஜா இசைக்குழுவில் பணியாற்றிய 'டிரம்மர்' புருஷோத்தமன் காலமானார்!
சென்னை: இளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன்.
டிரம்மராகவும் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்தப் படங்களில் பணியாற்றி வந்துள்ளார்.

வயது முதிர்வு
ஒரு முறை துபாயில் நடந்த இசை விழா ஒன்றில், தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பயணிப்பவர் இவர் என்று இசை அமைப்பாளர் இளையராஜாவே இவரை பாராட்டி, அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார் புருஷோத்தமன். இதற்காக சிகிச்சை பெற்றும் வந்தார்.

ட்ரம்ஸ் இசை
கடந்த ஒரு மாதமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். இளையராஜாவின் பல்வேறு பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசையை நாம் கேட்டிருக்கிறோம். மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி எனப் பல்வேறு இனிமையான பாடல்களில் டிரம்ஸ் வாசித்து அசத்தியவர், மறைந்த புருஷோத்தமன்.

நினைவோ ஒரு பறவை
சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் வரும், 'நினைவோ ஒரு பறவை' பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரொட்டோடாம் ( Rototom) என்ற புதிய வகை ட்ரம்ஸ் இசைக்கப்பட்டது. 1968ம் ஆண்டு அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து பழகி, வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன்தான் என்கிறார் கானா பிரபா.

கடைசியாக
ட்ரம்ஸ் மட்டுமல்லாமல் இளையராஜாவிடம் இசை கன்டக்டராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய இவர், ஜெயா டிவி நடத்திய 'ராஜா அன்றும் இன்றும் என்றும்' என்ற நிகழ்ச்சியில்தான் கடைசியாக கலந்துகொண்டிருந்தார். அதன்பிறகு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இரங்கல்
மறைந்த புருஷோத்தமன் மனைவி, கடந்த இரண்டு மாதத்துக்கு முன்புதான் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இசைக்கலைஞர் புருஷோத்தமனின் மறைவை அடுத்து இசைக் கலைஞர்கள் பலர் சமூகவலைத் தளங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











