இசை யூனிவர்ஸ்னா.. அதுல மவுண்ட் எவரெஸ்ட் எங்கப்பா.. இசையா? மொழியா? பிரச்சனை.. கார்த்திக் ராஜா பளிச்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா சென்னையில் நடைபெற்ற இசை விழாவில் பங்கேற்ற நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் இசைப் பெரியதா? மொழி பெரியதா? என்கிற சர்ச்சை வெடித்துள்ளது. இசையும் மொழியும் இணைந்தால்தான் நல்ல பாடல் உருவாகும் என வைரமுத்து பேசியுள்ள நிலையில், இசை மட்டுமே உயர்ந்தது என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரமுத்துவை விளாசித் தள்ளினார்.

வளர்த்து விட்டவர்களை மறந்துவிட்ட நன்றி கெட்ட மனுஷன் என வைரமுத்துவை வெளிப்படையாக திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கங்கை அமரன் பேச்சுக்கு வைரமுத்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காமல் கடந்து சென்றுள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கங்கை அமரன் பேசியதற்கு எதிரான கண்டனங்களையும் முன்வைத்தனர். வைரமுத்துவை அப்படி அவர் பேசியிருக்கக் கூடாது என்றும் கூறினர்.
காப்புரிமை பிரச்சனை: இளையராஜா படத்தின் பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் 96 படத்தில் பயன்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது. சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கூலி படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜா பாடல் பயன்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட "கண்மணி அன்போடு காதலன்" பாடலுக்கு எதிராகவும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த பாடலுக்கான உரிமையை பெற்று பயன்படுத்தியதாக படக்குழுவினர் கூறியுள்ள நிலையில் மேலும், சர்ச்சை கிளம்பியுள்ளது.
இளையராஜா vs வைரமுத்து: கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவருக்கும் இடையில் மோதல் வெடித்து வரும் நிலையில் தற்போது அது குறித்து ஏகப்பட்ட விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சீண்டி வரும் நிலையில் பிரச்சனை பெரிதாகி உள்ளது. பாடலுக்கு இசைப் பெரியதா அல்லது மொழி பெரியதா என்கிற விவாதங்களும் கிளம்பியுள்ளன. பத்திரிக்கையாளர்கள் எந்த ஒரு பிரபலத்தை பார்த்தாலும் அந்தக் கேள்வியை முன்வைத்து வரும் நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் ராஜா பதில்: இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், இசை பெரியதா? அல்லது மொழி பெரியதா? என்கிற கேள்வி கேட்கப்பட்ட போது மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதுதான் பெரியது எது வித்தியாசமான பதிலை அளித்துள்ளார். தமிழும் இசையும் இரண்டறக் கலந்தது தான் என்றும் இசைத்தமிழ் என்றே தமிழை போற்றுபவர்கள் நம் மக்கள் என்று கூறியுள்ளார்.
எங்கப்பா மவுண்ட் எவரெஸ்ட்: இசை யுனிவர்ஸ்னா அதில் எங்க அப்பா மவுண்ட் எவரெஸ்ட் என்றும் இசைத் துறையில் அவர் சாதித்தது மிகவும் பெரியது என்றும் கார்த்திக் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின் போது பளிச்சென்று தனது கருத்தை முன்வைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவை விட இளையராஜாவுக்கு அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜாவை தான் ரொம்பவே பிடிக்கும். இளையராஜாவுடன் இணைந்து பல படங்களுக்கு இவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











