நான் எந்த பாடகர்களையும் பாராட்டியதில்லை, எஸ்பிபியை ஒரு தடவை பாராட்டினேன்: இளையராஜா
சென்னை: நம்முடைய தவறுகளை விட சிறந்த ஆசான் கிடையாது எனக் கூறிய இளையராஜா, எந்த பாடகர்களையும் பாராட்டியது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த இளையராஜா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது, பல்வேறு சுவாராஸ்யமான விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அண்ணன்
இளையராஜா தன் ஹார்மோனியத்துடன் மேடையில் அமர்ந்ததும், மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேச ஆரம்பித்த ராஜா, ஹார்மோனியத்திலிருந்து தன்னுடைய கதையை ஆரம்பித்தார். அந்த ஹர்மோனியம் விலைமதிப்பில்லாதது. இவன் என்னுடைய சிறந்த நண்பன், என்னைப்பற்றி இவனுக்கு நன்றாகத் தெரியும். தினந்தோறும், புதுப்புது மெட்டுக்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறான். ஆனாலும், இவனை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

சிறந்த ஆசான்
ஹார்மோனியத்தை பற்றிய நினைவுகளில் நெகிழ்ந்த இளையராஜா, 1960 ஆம் ஆண்டு கோவை உக்கடத்திலிருந்து 60 ரூபாய்க்கு அவருடைய அண்ணன் அதை வாங்கி வந்ததாகவும், அதை செய்தவர், எம்.என்.பொன்னையா என்றும் குறிப்பிட்டார். ஆரம்ப நாட்களில் ஹார்மோனியத்தின் மீது கை வைத்தாலே அண்ணன் அடிப்பார் எனக் கூறிய அவர், அண்ணன் இல்லாத தருணங்களில் திருட்டுத்தனமாக ஹார்மோனியத்தை வாசித்த விஷயங்களை நினைவுகூர்ந்தார். நிறைய தவறுகள் செய்து வாசிக்கக் கற்றுக் கொண்டதாகவும், நாம் செய்யும் தவறுகளை விட மிகச் சிறந்த ஆசான் இல்லை என்றார்.

1300 படங்கள்
சில படங்கள் பார்க்கவே முடியாதபடி இருக்கும். ஆனால் அதுபோன்ற படங்களுக்கும் நான் இசையமைத்திருக்கிறேன். ஒரு படத்திற்கு இசையமைக்க நான் நான்கு முறை படம் பார்க்க வேண்டும். அப்போது நான் என்ன நிலைக்கு ஆளாகியிருப்பேன் என யோசித்துப் பாருங்கள் எனச் சிரித்தார். அப்படியிருந்தும் நான் 1300 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டேன். அவற்றுக்கெல்லாம் நான்கு நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது இல்லை. என்னுடைய ரெகார்டிங் தியேட்டரில் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு படம் தங்காது எனக் கூறிய இளையராஜா, இசைமீது அவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறார் என்பதையும் வித்தியாசமாக விளக்கினார். அவரிடமிருந்து எப்படி இத்தனை மெட்டுக்கள் வந்தது எனத் தெரிந்திருந்தால் இசையமைப்பதை நிறுத்திவிட்டு, எனக்கு இசை தெரியும் என வீட்டிற்குள்ளே உட்கார்ந்திருப்பேன் எனக் கூறி வியப்பூட்டினார்.

எது கலை
லைவ் ரெகார்டிங் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ரெகார்டிங் செய்வது குறித்து கேட்கப்பட்டதற்கு, நாம் எப்போதும் அடிப்படையான விஷயங்களை பின்பற்ற வேண்டும், ஹாலிவுட்டில் கூட லைவ் ரெகார்டிங் முறைக்கு மாறி வருகின்றனர். தொழில்நுட்பத்தின் உதவியால் இப்போது நன்றாக கம்போஸ் செய்யப்படுவதாக நினைக்கிறீர்கள் இல்லையா? ஆனால் அது உண்மையில்லை. அவை எல்லாம் கம்ப்யூட்டரில் புரோக்ராம் செய்யப்பட்டு வரக்கூடிய ஒலிகள். ஒரு இசை உண்மையான இசையாக இல்லாத பட்சத்தில் அதை நீங்கள் கலை என்று சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டார்.

பாராட்டு
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி பேச்செடுத்த இளையராஜா, ஒருவர் அவருக்குள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமா? எனக்கு பாடல் பாடிய எந்த பாடகர்களையும் நான் பாராட்டியது இல்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிறைய நிகழ்ச்சிகளில் அவரை நான் பாராட்டியதே இல்லை எனச் சொல்லியிருக்கிறார். நான் அவரை ஒரே ஒரு முறை தான் பாராட்டியிருக்கிறேன். வம்சி இயக்கிய தெலுங்கு படத்தில் ஒரு கஸல் பாடலை மிக அழகாக பாடினார். அப்போது அவரை பாராட்டினேன் என்றார்.


Click it and Unblock the Notifications











