இசை நிகழ்ச்சி மேடையில் செக்யூரிட்டியை திட்டிய இளையராஜா: வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த இசை நிகழ்ச்சியில் செக்யூரிட்டி ஒருவர் இளையராஜா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
ராயல்டி பிரச்சனையால் பிரிந்த இசைஞானி இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பழசை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்தனர். அப்படி ஒன்று சேர்ந்த பிறகு அவர்கள் நேற்று முதன்முதலாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக எஸ்.பி.பி. இளையராஜா இசையில் விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக தாலாட்டு பாடல் ஒன்றை பாடினார்.

கோபம்
இசைஞானியையும், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தையும் ஒரே மேடையில் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வந்தனர். மகிழ்ச்சியுடன் வந்த ரசிகர்கள் மேடையில் இளையராஜா கோபப்பட்டு திட்டியதை பார்த்து கவலை அடைந்தனர்.

இளையராஜா
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வரவே அதை பார்த்த இளையராஜா கோபம் அடைந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது இப்படி வந்து இடையூறு செய்யலாமா என்று இளையராஜா கேட்டார். அதற்கு அந்த நபரோ, தாகமாக இருக்கிறது என்றார்கள் தண்ணீர் கொண்டு வந்தேன் என்று பரிதாபமாக பதில் அளித்தார்.
மன்னிப்பு
அந்த செக்யூரிட்டி சொன்ன விளக்கத்தை இளையராஜா ஏற்கவில்லை. இதையடுத்து அவர் இளையராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார். இதையடுத்து இசை நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களையும் இளையராஜா கடிந்து கொண்டார். ரூ. 500, ரூ. 1000 கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு ரூ. 10,000 இருக்கையில் அமர்வது சரியா என்று கேட்டார்.
வைரல்
இசை நிகழ்ச்சி மேடையில் இளையராஜா கோபப்பட்டு செக்யூரிட்டி மற்றும் ரசிகர்களை கடிந்து கொண்டபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அண்மையில் தான் அவர் அளித்த பேட்டியில் தனது பாடல்களை பயன்படுத்தும் இசையமைப்பாளர்களை விளாசினார். அந்த பேட்டியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு தற்போது இசை நிகழ்ச்சியில் கோபம் அடைந்துள்ளார். நேற்று ஒரே மேடையில் எஸ்.பி.பியும், ஜேசுதாஸும் தளபதி பட பாடலை பாடினார்கள். இப்படி பல நல்ல விஷயம் நடந்த நேரத்தில் ராஜா சார் கோபப்பட்டது பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











