Vadivelu - அவனுக்கு அவ்ளோதான் அறிவு.. வடிவேலு காமெடி பார்த்துட்டுதான் தூங்குவேன்.. விஜயகாந்த் சொன்ன சீக்ரெட்
சென்னை: ஒரு கார் பார்க்கிங் பிரச்னையில் விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பிரச்னையை மனதில் வைத்து 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடைகளில் ஏறி விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார் வடிவேலு. ஆனால் விஜயகாந்த் உயிரோடு இருந்தவரையிலும் வடிவேலுவுக்கு எதிராக ஒரு வார்த்தையைக்கூட பேசவில்லை.
வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரண். வடிவேலு உள்ளே நுழைந்தபோது கவுண்டமணியும், செந்திலும் பீக்கில் இருந்தனர். முக்கியமாக வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு ராஜ்கிரணிடம் கவுண்டமணி கடிந்துகொண்டதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவரை தாஜா செய்து ராஜ்கிரண் வாய்ப்பு கொடுத்துவிட்டார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வடிவேலு தனக்கென்ற உயரத்தை அடைந்தார்.

சின்னக்கவுண்டர் பஞ்சாயத்து: அவர் வளர்ந்துவரும் நேரத்தில் அவருக்கு உதவி செய்தவர் விஜயகாந்த். அதாவது சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கக்கூடாது என கவுண்டமணி கண்டிஷன் போட அதையும் மீறி வடிவேலுவுக்கு கதாபாத்திரம் கொடுத்தார் விஜயகாந்த். அதேபோல் பல படங்களில் வாய்ப்புகளை கொடுத்தார் விஜயகாந்த். வடிவேலு பெரிய அளவில் வளர்ந்ததற்கு காரணம் அவருடைய உழைப்புதான் என்றாலும் விஜயகாந்த் உதவியதும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
பிரச்னை: வடிவேலு பெரிய அளவில் வளர்ந்த பிறகு அவரது பாதையில் தனித்து பயணப்பட தொடங்கினார். அந்த சமயத்தில் விஜயகாந்த்துக்கும் வடிவேலுவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதாவது வடிவேலுவின் அலுவலகத்தின் அருகே விஜயகாந்த்தின் ஆட்கள் காரை நிப்பாட்டியதாகவும் அப்போது அவர்களை வடிவேலு தரக்குறைவாக பேசியதால் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த பிரச்னை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வரை சென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.
அரசியல் மேடையில் வடிவேலு: இப்படிப்பட்ட சூழலில் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். இதனையடுத்து திமுக மேடைகளில் தோன்றிய வடிவேலு விஜயகாந்த்தை சரமாரியாக தாக்கி பேசினார். அது பலரிடமும் முக சுளிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு பிரச்னை ஓய்ந்தாலும் வடிவேலு பேசிய பேச்சு கேப்டன் ரசிகர்களிடையே இன்னமும் வடுவாகவே இருக்கிறது.
வராத வடிவேலு: விஜயகாந்த் கடந்த மாதம் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை வடிவேலு. அதுமட்டுமின்றி ஒரு இரங்கலைக்கூட தெரிவிக்கவில்லை. இது அவருக்கு எதிராக வலுவான கண்டனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. வடிவேலு செய்தது கொஞ்சம்கூட நியாயம் இல்லை என்று பலரும் பேசுகிறார்கள். திரைத்துறையிலேயேக்கூட வடிவேலுவுக்கு எதிராக பலரும் திரும்பியிருக்கிறார்கள்.
இளவரசு பேட்டி: இந்நிலையில் வடிவேலுவுக்கும் விஜயகாந்த்துக்கும் பிரச்னை உச்சத்தில் இருந்த சமயத்தில் நடந்த விஷயம் குறித்து நடிகர் இளவரசு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எங்கள் ஆசான் படத்தில் விஜயகாந்த்துடன் நடித்தேன். அப்போது அவரிடம் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஐயோ முடியவே இல்ல. ஒருத்தனும் சொன்ன பேச்ச கேட்க மாட்டேங்குறான். சட்டப்பேரவையில் நடப்பதெல்லாம் பார்த்தால் கடுப்பா இருக்கு.
அவனுக்கு அவ்வளவுதான் அறிவு: நாம ஒன்னு சொன்னா வெளியே ஒன்னு போடுறானுங்க. ஒரே டார்ச்சர். இரவில் வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டுத்தான் தூங்கவே போகிறேன் என சொன்னார். உடனே நான் அவரது முகத்தை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அதை புரிந்துகொண்ட விஜயகாந்த், 'அவன் திட்டுனா திட்டிட்டுப்போறான் இளவரசு. அவனுக்கு அவ்ளோதான் அறிவு' என சொன்னதாக இளவரசு அந்தப் பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











