வான் மழை கொட்டினாலும் இசை மழையை நிறுத்தாத இளையராஜா.. வெளியான சூப்பர் அறிவிப்பு
சென்னை: இளையராஜா அண்மையில்தான் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றி முடித்தார். அதனைத் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியிருக்கும் அவர்; தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இசை கச்சேரி நடத்துவதென்று முடிவெடுத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி இசை கச்சேரிக்கு திட்டமிடிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையால் நாடு பதற்றமான சூழலில் இருந்தது. எனவே கச்சேரி நடக்கும் தேதி ஜூன் 7 என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இசைஞானி, மேஸ்ட்ரோ என்று புகழப்படுபவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை 2, தினசரி ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் தினசரி படத்தின் பாடல்கள் சுமாராகத்தான் இருந்தன. அதேசமயம் விடுதலை 2 பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. முக்கியமாக படத்தின் இடைவேளை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் அவரது இசை கூஸ் பம்ப்ஸை ஏற்படுத்தியதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா: சினிமாவில் இசையமைப்பது மட்டுமின்றி சிம்பொனி ஒன்றையும் கடந்த வருடம் உருவாக்கியிருந்தார் அவர். அதனை லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் வைத்து அரங்கேற்றமும் செய்திருந்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள்வரை இருந்த அந்த சிம்பொனியை அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே கொண்டாடினார்கள். இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் ராஜா இதன் மூலம் பெற்றார்.

இசை கச்சேரி: சிம்பொனியை அரங்கேற்றி முடித்திருக்கும் அவர்; உழைப்பதில் மேற்கொண்டு வேகம் கூட்டியிருக்கிறார். அந்தவகையில் உலகம் முழுவதும் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டிருக்கிறார். அந்தவகையில் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும் அவர்; சிம்பொனிக்கு பிறகான தன்னுடைய முதல் கான்செர்ட்டை கரூரில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் அந்த கச்சேரிக்கு மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
நாடு இருந்த பதற்றமான சூழ்நிலை: மேலும் கோவையில் கடந்த 17ஆம் தேதி இசை கச்சேரி நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவியதால் நாடு பதற்றமான சூழலில் இருந்தது. இதனால் இசை கச்சேரியை நடத்துவது ஒத்து வராது என்று முடிவு எடுத்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கோவை இசை கான்செர்ட் ஜூன் 7ஆம் தேதி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெய்யென பெய்யும் மழை: ஆனால் அந்தத் தேதியிலும் பிரச்னை வரும் சூழல் உருவாகியிருக்கிறது. அதாவது கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லாம் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி வருகிறது. வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியிருக்கிறது. மேலும் இளையராஜா திட்டமிட்டிருக்கும் நாளிலும் மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இளையராஜா உறுதி: இந்நிலையில் இசை கச்சேரி நடத்துவது குறித்து பேசியிருக்கும் இளையராஜா, "கோயம்புத்தூரில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். நீங்கள் எல்லாம் இசை நிகழ்ச்சியை மழையில் நனையாமல் கேட்க வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. என்னதான் அடாது மழை பெய்தாலும் எங்களது இசை நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











