இசையமைப்பாளரே இல்லாமல் உருவாகிறதா இளையராஜா பயோபிக்?.. இது என்ன புது கதையா இருக்கு
சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இளையராஜா முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர். இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.

நாடகங்களிலும்: மேடையில் வாசிப்பாளராக மட்டுமின்றி பல நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி வாத்தியங்கள் ஏதும் வாங்க பணம் இல்லாததால் வெறும் பூட்டுக்களை வைத்துக்கொண்டு மட்டுமே இசையமைத்த வரலாறு எல்லாம் ராஜாவுக்கு உண்டு. அவர் இசையை வாத்தியங்களிலிருந்து எடுக்காமல் தனது வாழ்க்கையிலிருந்து எடுத்தார் என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர் ஜன கான ராஜாவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர்கூட கதையாசிரியர் ரத்னவேலு அளித்த பேட்டியில் இளையராஜா மீது பெரும் வன்மத்தை கக்கினார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.
கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார்.
பயோபிக்: அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக் எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.
இசையமைப்பாளரே இல்லையா?: இந்நிலையில் இளையராஜா பயோபிக் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக யாரையும் ஃபிக்ஸ் செய்யாமல் படம் முழுவதும் இதுவரை இளையராஜா இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை ஆகியவைகளை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது நடக்கும்பட்சத்தில் இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்ற பெயரை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











