இளையராஜா பிறந்த நாள்... முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!
சென்னை: இளையராஜாவின் பிறந்த நாளை இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக தன் பிறந்த நாள் விழாவன்று பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சில நிமிடங்கள் ஒதுக்கி, திரையுலகினர் தரும் மரியாதையை ஏற்றுக் கொண்டு, மீண்டும் வேலைக்குத் திரும்பிவிடுவார் ராஜா.
பிள்ளைகள், அல்லது திரையுலகப் பிரபலங்கள்தான் அவரை கேக் வெட்ட வற்புறுத்துவார்கள். அவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு செய்வார். ஒரு போதும் விழாவாக அதைக் கொண்டாடியதில்லை.

ஆனால் இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல், இந்த மாநிலத்துக்கே நன்மை தரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அன்று மாநிலம் முழுக்க 71001 மரக் கன்றுகள் நடப்படுகின்றன.
தன் பிறந்த நாளால் இவ்வளவு பெரிய நல்ல விஷயம் நடப்பதை அறிந்து மகிழ்ந்த ராஜா, முதல் மரக்கன்றை தானே தன் கையால் நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவும் சம்மதித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளில் இந்த விதத்தில் ராஜாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரசிகர் மன்றப் பொருப்பாளர்கள் ஆயிரக்கணக்கில் மரக் கன்றுகளை ஏற்கெனவே வாங்கி வைத்துவிட்டனர். இளையராஜா பிறந்த பண்ணைப்புரத்தில் மட்டும் 3000 மரக்கன்றுகள் நடுகின்றனர் ரசிகர்கள்.
தங்கள் வீடுகளில் இந்த கன்றுகளை நட விரும்புவோருக்கும் இலவசமாக மரக் கன்றுகளைத் தருகிறார்கள் ரசிகர்கள்.
தமிழகத்தைத் தாண்டி, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள இளையராஜா ரசிகர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட பல்வேறு திட்டங்களை வைத்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ரசிகர்களும் இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து அறிவித்துள்ளனர்.
இதுபற்றி மேலும் அறிய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 99529 45454 / 97919 23568 எண்களில் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications











