பாலுமகேந்திரா படத்திற்கு இசையமைக்கும்போதுதான் அப்படி.. மனம் திறந்த இளையராஜா
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நினைவு நாளை முன்னிட்டு பாலுமகேந்திராவை கொண்டாடுவோம் என்கிற பெயரில் நிகழ்வுகள் நடைபெற்றது. அதில் இளையராஜா பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பாலு மகேந்திரா. சில காரணங்களால் இந்தியாவுக்கு வந்த அவர் ஒளிப்பதிவு படிப்பு படித்து தலை சிறந்த கேமரா மேனாக திகழ்ந்துகொண்டிருந்தார். பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என அவர் இயக்கிய படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் கேமராவிலும் ஜாலம் காட்டியவர் அவர்.

செந்தாழம் பூவில்: உதாரணமாக முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலில் பாலுமகேந்திராவின் கேமரா அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். அதேபோல் பல படங்களில் பாலுமகேந்திராவின் கேமரா அந்தப் படங்களை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கின்றன. அவரது கேமரா கண்கள் மட்டும்தான் சாதாரண அழகியையும் பேரழகியாக காட்டும் என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் சொல்வதுண்டு.
சர்ச்சைகள்: பாலுமகேந்திரா சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சத்திலும் இருந்தவர். முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர்; பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களில் அகிலா - பாலுமகேந்திராவுக்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார்.
வீரியமான வித்துக்கள்: பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்கள்தான் இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன் என அந்த லிஸ்ட் செல்லும். அதேபோல் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா பேச்சு: பாலுமகேந்திரா கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க அவரது நினைவு நாளையொட்டி பாலுமகேந்திராவை கொண்டாடுவோம் என்கிற பெயரில் நான்கு நாட்கள் நிகழ்வுகள் நடந்தன.அதில் பேசிய இளையராஜா, "பாலுமகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும்போதுதான் மனது இதமாக இருக்கும். அவரது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இசையமைக்கும் கேப்பில் நான் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு இசையமைத்திருப்பேன்.
எனக்கு பிடித்த இயக்குநர் பாலுமகேந்திரா. அவரது படங்களுக்கு இசையமைக்கும்போது ரொம்பவே ரசனையோடு இசையமைப்பேன். ஏனெனில் அவரது படங்களில்தான் நான் அதீத சுதந்திரம் எடுத்துக்கொண்டு இசையமைப்பேன். அவரது படங்களுக்கு இசையமைக்கும்போது ஒரு இனம் புரியாத சந்தோஷம் எனக்குள்ளே ஒட்டிக்கொள்ளும்" என்றார் .


Click it and Unblock the Notifications











