பவதாரிணியின் கடைசி ஆசை.. நிறைவேற்றிய இளையராஜா.. யாருக்கும் தெரியாத விஷயம்
சென்னை: பவதாரிணி கடந்த மாதம் உயிரிழந்தார். பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை அவருக்கு பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து அவரது உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் இலங்கையில் பவதாரிணிக்கு உதவியாக இருந்தவர் அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் பவதாரிணி. இளையராஜாவின் மகளான அவர் மொத்தம் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார் அவர். கடைசியாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையையில் அனேகன் படத்தில் இடம்பெற்ற ஆத்தாடி ஆத்தாடி பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க பவதாரிணிக்கு பித்தப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் சரி வராததால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சையும் பலனளிக்காததால் கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது இளையராஜா குடும்பத்தினர் சேர்ந்து பாடல்கள் பாடியது காண்போரை உருக வைத்தது.
இலங்கை நண்பர் பேட்டி: இந்தச் சூழலில் இலங்கையில் பவதாரிணிக்கு உதவியாக இருந்தவர் பல்வேறு விஷயங்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ""எனக்கு இந்திய திரைத்துறையினரோடும் பழக்கம் இருக்கிறது. அப்படித்தான் வெங்கட் பிரபு எனக்கு பழக்கமானார். அவர் ஒரு நண்பர் மூலம் என்னை தொடர்புகொண்டு பவதாரிணி சிகிச்சைக்காக இலங்கை வருகிறார் என்று சொன்னார்.
ஓபன் செய்த சபரிராஜ்: சிகிச்சைக்கு வருகிறார் என்று சொன்னாரே ஒழிய என்ன சிகிச்சை என்றெல்லாம் சொல்லவில்லை. நான் இங்கு ஒரு ஊடகத்தில் பணியாற்றுகிறேன். வேலையை முடித்துவிட்டு ஒருநாள் பவதாரிணியையும், அவரது கணவரையும் சந்தித்தேன். அப்போது பவதாரிணி நல்ல உடல்நிலையோடுதான் இருந்தார். அப்போதுதான் என்ன மாதிரியான சிகிச்சைக்கு வந்திருக்கிறோம் என்பதை பவதாரிணியின் கணவர் சபரிராஜ் என்னிடம் சொன்னார்.
உயிரை காப்பாற்ற நினைத்தார்கள்: இளையராஜா குடும்பத்தை பொறுத்தவரை அவர்கள் பணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. எப்படியாவது பவதாரிணியை காப்பாற்றிட வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார்கள். யுவன் ஷங்கர் ராஜா மூலம்தான் இலஙகியில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர் பற்றி அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
கடைசி ஆசை: பவதாரிணி இங்கு இருந்தபோதுதான் இளையராஜாவின் கான்செர்ட்டும் நடப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் பவதாரிணி இளையராஜாவை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். அதனையடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அவரது அறைக்கு பக்கத்தில் இளையராஜாவுக்கென்று இன்னொரு அறை புக் செய்யப்பட்டது. டாடியை பார்த்துவிட்டுத்தான் நான் சென்னை கிளம்ப வேண்டும் என்ற அவரது ஆசை எல்லோருக்கும் புரிந்தது. உடனடியாக இளையராஜாவும் வந்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் பவதாரிணியுடன் நேரம் செலவிட்டார். அடுத்த நாள் பவதாரிணியின் உயிர் பிரிந்தது""என்றார்.


Click it and Unblock the Notifications











