இளையராஜாவுக்கு யார் ஆறுதல் சொல்வார்? மறைந்த நண்பனை நினைத்து வருந்தும் இசைஞானி!
சென்னை: தமிழ் சினிமாவின் பொக்கிசங்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இசையமைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் சாமானியன் என்ற திரைப்படம் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே இளையராஜா என்றால் சர்ச்சை ராஜா என அழைக்கும் அளவிற்கு அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் சுற்றிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக பாடலுக்கு ராயல்டி கோரும் விஷயம் தொடங்கி, இசை பெரியதா அல்லது மொழி (சொற்கள்) பெரியதா என்ற கேள்வியும் அவரைச் சுற்றிக்கொண்டே உள்ளது.
இளையராஜா
மேற்குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக இளையராஜாவைச் சுற்றி பல விவாதங்கள் விமர்சனங்கள் இருந்தாலும் இளையராஜா இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலைகளில் கவனமாக இருக்கின்றார். குறிப்பாக அவரது அன்பு மகள் பவதாரணி மறைவுகுப் பின்னர் இளையராஜா முடங்கிவிடுவார் என பலரும் கூறினர். ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கி தனது ரசிகர்களுக்காக புது சிம்ஃபொனியையே உருவாக்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இளையராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில், “ எப்படியா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது.. யு ஆர் கிரேட்” என பேச வைத்தது.

தமிழ் சினிமாவின் உச்சம்
இப்போதே இளையராஜா இப்படி என்றால் அவரது ஆரம்ப காலகட்டம் குறித்து யோசித்தால் மூச்சு முட்டும் அளவிற்கு பாடல்களை கொடுத்து மிரளவைத்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்த 80 மற்றும் 90-களில்தான் தமிழ் திரையிசைக்கு உலகளவில் தனி மதிப்பு உருவானது எனலாம். இளையராஜா இசை என்றால் அந்த இசைக்கு ஏற்றவாரு குரல் வளத்தை மாற்றி பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இருவரும் இணைந்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை இந்திய திரை உலகிற்கு கொடுத்துள்ளனர். இருவரும் இளமைக் காலத்தில் இருந்தே ஒன்றாக பயணித்தவர்கள் மற்றும் ஒன்றாக சினிமாவில் கோலோச்சியவர்கள். மாட்டு வண்டி போகாத ஊருக்கும் பாட்டு வண்டி கொண்டு சென்ற கூட்டணி என்றால் அது இளையராஜா மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூட்டணியைச் சொல்லலாம்.

எஸ்.பி.பி. மரணம்
கொரோனா காலகட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு, பாடகர் பாலசுப்ரமணியம் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக இறந்தார். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் தொடங்கி இசை ரசிகர்கள் வரை அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த காலகட்டத்தில் இளையராஜா பாலசுப்ரமணியம் மறைவு தொடர்பாக அழுதுகொண்டே பேசியபடி வீடியோ வெளியிட்டு தனது அஞ்சலியைச் செலுத்தியிருந்தார். இது ரசிகர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இளையராஜா ட்வீட்
இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் “என்றும் என் நினைவில்... miss you" என பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் தற்போதைய பதிவு ரசிகர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், இளையராஜா தனது நண்பனை நினைத்து மிகவும் வருத்தப்படுவது தொடர்பாகவும், இளையராஜாவின் இந்த வருத்தத்திற்கு யார் அறுதல் சொல்வார்கள் எனவும் பேசிவருகின்றனர். இளையராஜா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது ஜூன் 2ஆம் தேதி தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கூட, எனது மகள் இறந்த துக்கம் தன்னை வாட்டுவதாகவும், இந்த பிறந்த நாள் ஏற்பாடுகள் அனைத்தும் ரசிகர்களாகிய உங்களுக்காகத்தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











