Ilayaraaja - தாலாட்டு பாடலை வேறு மாதிரி வாங்கிவிட்டார் மணிரத்னம் - இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: Ilayaraaja (இளையராஜா) நாயகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் நிலா அது வானத்து மேலே பாடல் குறித்து இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் இதோ.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.

படு பிஸி: அன்னகிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
காத்திருந்த இயக்குநர்கள்: இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசையை வாங்குவதற்காக விடியும் முன்னரே அவரது ஸ்டூடியோவுக்கு இயக்குநர்கள் படை எடுத்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.
வற்றாத இசை நதி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கு இசையமைத்தார். அந்த ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி. தொடர்ந்து இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவுக்கு இன்று 80ஆவது பிறந்தநாள்.

தாலாட்டு பாடல்: இளையராஜாவுக்கு 400ஆவது படம் நாயகன். அந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இன்றுவரை க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் நாயகனில் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட். குறிப்பாக நிலா அது வானத்து மேலே பாடல் கொண்டாட்டம் தரக்கூடிய ஒரு துள்ளல் பாடல். ஆனால் அந்தப் பாடலை அவர் குழந்தையை தூங்க வைக்க தாய் பாடும் தாலாட்டுக்காக ட்யூன் செய்து வைத்திருந்தாராம். அந்த ட்யூனை கேட்ட மணிரத்னம், இதை ஒரு துள்ளல் பாடலாக பயன்படுத்திக்கொள்ளலாமா என கேட்க இளையராஜா கூடுதல் ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் சேர்த்து பாடலை மாற்றிக்கொடுத்திருக்கிறார்.
வைதேகி காத்திருந்தாள்: அதேபோல், வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம் பெற்றிருகும் அழகு மலர் ஆட ஒரு சோகமான பாடலாகத்தான் எல்லோருக்கும் பரிச்சயம். ஆனால் காதலர்கள் பாடுவதுபோன்ற ப்யூர் மெலோடியாக உருவாக்கி வைத்திருந்தார். அதை கேட்டர் சுந்தர்ராஜன் இந்தப் பாடலை ஒரு சோகமான சிச்சுவேஷனுக்கு பயன்படுத்துவது போல் மாற்றிக்கொடுங்கள் என கேட்டு அதை சிச்சுவேஷனுக்கு பயன்படுத்தியிருக்கிறார். இந்தத் தகவல்களை இளையராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











