நீ ஹீரோவா.. அதுவே பெரிய காமெடி.. சூரியை கலாய்த்த இளையராஜா.. விஜய் சேதுபதியையும் விட்டு வைக்கல
சென்னை: இசைஞானி என்று ஒட்டுமொத்த தமிழர்களாலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் உருவாகியிருக்கும் விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் இளையராஜா எந்த மாதிரியான பின்னணி இசையை கொடுக்கப்போகிறார் என்ற ஆவலும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
தமிழ்நாட்டின் சொத்தாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. 1975ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலும் இன்றுவரை பலரால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போதைய நவீன காலத்தில்கூட இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக இளையராஜா சுறுசுறுப்புடன் வேலை செய்துவருகிறார்.

வரிசையாக படங்கள்: இளையராஜாவின் இசையமைப்பில் கடைசியாக ஜமா திரைப்படம் வெளியானது.அந்தப் படமும், படத்தில் இடம்பெற்றிருந்த இசையும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் சிம்பொனி ஒன்றையும் சமீபத்தில் எழுதி முடித்தார் இளையராஜா. இந்த வயதிலும் அவரது ஓட்டத்தை பார்க்கையில் பெரும் ஆச்சரியமாக இருப்பதாக திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
விடுதலை 2: அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை 2 படம் வரவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார். வெற்றிமாறனின் தரமான மேக்கிங், இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை என பலவும் வரவேற்பை பெற்றாலும் சில இடங்களில் படம் விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக வாத்தியாரின் ஆட்களை போலீஸ் வேட்டையாடும்போது இளையராஜா பின்னணி இசையை அவ்வளவு மாஸாக போட்டிருக்க வேண்டாம் என்று பலரும் தங்களது கருத்தினை தெரிவித்தார்கள்.
தெளிவுடன் களமிறங்கிய டீம்: இப்படி முதல் பாகத்துக்கு சில விமர்சனங்கள் வந்ததால் படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் ரொம்பவே கவனமாகவும்; தெளிவாகவும் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதே மனநிலையில்தான் இளையராஜாவும் இருக்கிறாராம். மேலும் விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரிக்கு கிடைத்த நல்ல பெயர் இதிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

கலாய்த்த இளையராஜா: சூழல் இப்படி இருக்க படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன், இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது சூரி 50 பேரை அழைத்து வந்திருப்பதாக தொடர்ந்து கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்தார். இந்நிலையில் இளையராஜா பேசுவதற்காக மைக் முன்பு வந்தார்.
அப்போது அவர் சூரியிடம், 'என்ன நீங்க 50 பேரை அழைத்து வந்தீர்கள். உங்கள் பெயரை சொன்னதும் கையும் தட்டல, விசிலும் அடிக்கல. ஒழுங்கா அவங்க வேலை செய்யல' என்று கூறினார். உடனே சூரி, 'இல்லை ஐயா நீங்கள் பேசும்போது குறுக்கிடக்கூடாதுனுதான் அவங்க அமைதியாக இருக்கிறார்கள்' என்று சொல்ல; 'நீங்கள் இப்போது எத்தனை படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு சூரி, இரண்டு படங்கள் என்று சொல்ல, 'உங்களை ஹீரோவாக்குனது வெற்றிமாறன். நீங்கள் காமெடியனாக இருந்தீர்கள். இப்போது ஹீரோவாக மாறியிருக்கிறீர்கள். இது காமெடியா இல்லையா' என்று கலாய்த்துவிட்டு சும்மாதான் சொன்னேன் என்று முடித்துக்கொண்டார்.

பிறகு அவர் பேச ஆரம்பித்தபோது, விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சிலர் குறுக்கிட்டார்கள். உடனே மைக்கை வாங்கிய விஜய் சேதுபதியோ, 'சார் நீங்கள் பேசும்போது அவர்கள் குறுக்கிட்டது என் தப்பு இல்லை சார்' என்று தற்காத்துக்கொண்டார். அதற்கும் இளையராஜா, 'நீங்களும் ஆளை கூட்டிட்டு வந்தீங்களா' என்று கலாய்த்தார்.மேலும் நீங்கள் இரண்டு பேரும் (சூரி, விஜய் சேதுபதி) உண்மையில் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறீர்களா இல்லை கூட்டி வந்திருக்கிறீர்களா என்று கூற அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது.


Click it and Unblock the Notifications











