Ilayaraja 75: 'நிறைய கேஸ் போட்டு நடையோ நடைனு நடக்கட்டும்'... எதிரணியை கலாய்த்த இளையராஜா!
இசைஞானி இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட இளையராஜா 75 பிரமாண்ட விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Recommended Video

சென்னை: எதிரணியை சேர்ந்தவர்கள் நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட பிரமாண்ட விழா இளையராஜா 75. அவரது 75 வது பிறந்தநாளையொட்டி இந்த விழா எடுக்கப்பட்டது. இவ்விழாவில் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகுமார், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் உள்பட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், முதல் நாளன்று இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடியும், பாடல்களை பாடியும் பல நட்சத்திரங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நேற்று நடந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் பாடப்பட்டன.
நள்ளிரவை தாண்டியும் நடந்த இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பார்வையாளர் கண்டு களித்தனர். விழாவின் நிறைவாக 'தென்பாண்டி சீமையிலே' பாடலை இளையராஜா பாடினார். பின்னர் பேசிய அவர், விழாவுக்கு தடை ஏற்படுத்த முயன்றவர்களை கலாய்த்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாதுனு நினைச்சவங்களுக்கும் மிக்க நன்றி.
இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சர்டிஃபிக்கேட் கொடுத்துருக்குனா அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவங்கதான். விஷால் மற்றும் அவரின் அணி வாக்குகள் வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்குப் பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.
சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவாங்க, சிலர் பாடலில் இருக்குற குறைய கண்டுபுடிச்சிக் காட்டி பெரிய ஆள் ஆவாங்க. அந்த மாதிரிதான் அவங்க இந்த மாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்கணும் நான் வாழ்த்துறேன்" என இளையராஜா கலகலப்பாக பேசினார்.


Click it and Unblock the Notifications