ராஜாவும் ரத்னமும்.. ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. நின்னுக்கோரி டு ராக்கம்மா.. செம காம்போ!
சென்னை: இசைஞானி இளையாராஜாவும், இயக்குநர் மணிரத்னமும் தங்கள் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
மணிரத்னத்தின் அறிமுக படமான பல்லவி அனுபல்லவி படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி, பகல் நிலவு, மெளன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, அஞ்சலி என பல வெற்றி படங்களில் கொடி கட்டி பறந்தது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் என்றும் அழியாத இசை கானங்களாய் உருவான சில எவர்க்ரீன் ஹிட் பாடல்கள் பற்றி இங்கே காண்போம்.

நின்னுக்கோரி
இளையராஜாவின் தீவிர விசிறியான இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்திக் நடனம் ஆடும் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் அப்படியே இளையராஜாவின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக போடப்பட்டிருக்கும். அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தாலும், பலரது ஃபேவரைட் பாடலாக நின்னுக்கோரி வரணம் பாடல் இடம்பெற்றிருக்கிறது.

மன்றம் வந்த தென்றலுக்கு
1986ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளன ராகம் படம் தான் மணிரத்னத்துக்கு முதல் அங்கீகாரமாய் அமைந்தது. மோகன், ரேவதி, கார்த்தி நடிப்பில் உருவான அந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜாவின் இசை தான். 'மன்றம் வந்த தென்றலுக்கு.. மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ" இந்த பாடல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமாவில் தனது மேஜிக்கை செய்து கொண்டு தான் இருக்கும்.

தென்பாண்டி சீமையிலே
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்த நாயகன் படத்தில் இடம்பெற்ற "தென்பாண்டி சீமையிலே" பாடலை எப்போது கேட்டாலும், ஏதோ ஒரு வலி நெஞ்சை அடைத்துக் கொள்ளும் விதமாக அற்புதமாக இசையமைக்கப்பட்டு இருக்கும். அதிலும், "வளரும் பிறையே தேயாதே.. அழுதா மனசு தாங்காது" என்ற வரிகளும் அதன் இசையும் இதயத்தை வருடும்.

ராக்கம்மா கையை தட்டு
இசைஞானி இளையராஜாவும் இயக்குநர் மணிரத்னமும் இணைந்து தமிழ் சினிமா துறையில் பல மாயாஜாலங்களை செய்துள்ளனர். அதிலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி படத்தின் இசை வேற லெவலில் இருக்கும். நட்புக்கென்ற பாடலாக "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே", தாய் பாசத்தை உணர்த்தும், "சின்னத்தாய் அவள்". "யமுனை ஆற்றிலே" என பல பாடல்கள் இன்றும் ரம்மியமாய் பலரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளித்துக் கொண்டிருக்கின்றன. வாலிப கவிஞர் வாலியின் வரிகளில் அந்த படத்தில் இடம்பெற்ற "ராக்கம்மா கையை தட்டு" பாட்டு இந்த ஜாம்பவான்களின் இன்னொரு வெற்றிக்கோப்பை.


Click it and Unblock the Notifications











