Ilayaraja: இளையராஜா கேட்ட ஒற்றைக் கேள்வி.. டிவிட்டரில் குவிந்த 4000 கமெண்ட்ஸ்.. விடாத ரசிகர்கள்!
சென்னை: இசைஞானி இளையராஜா படங்களுக்கு இசையமைத்து வருவது மட்டும் அல்லாமல், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தமிழ் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இளையராஜாவின் இசைக் கச்சேரியில் தங்களது மனதிற்கு நெருக்கமான பாடல்கள் அனைத்தும் இடம் பெறுமா என்ற கேள்வியுடன் ரசிகர்கள் ஆவலுடன் புறப்பட்டுச் செல்வார்கள். ரசிகர்கள் நினைக்கும் அனைத்து பாடல்களும் உள்ளதோ இல்லை, முதல் பாடலாக இசைஞானியின் மனதிற்கு நெருக்கமான " ஜனனி ஜனனி" பாடல் கட்டாயம் இருக்கும். இந்த பாடலைப் பாடி விட்டுத்தான் தனது கச்சேரிக்காக வரிசைப் படுத்தி உள்ள பாடல்களை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்வார்.
இசைஞானியின் அரங்கேற்றத்தில் பாடல்கள் ரசிகர்களை உருக வைக்கிறது என்றால், அந்த பாடல் உருவான போது அல்லது அந்த பாடல் இடம் பெற்றுள்ள படத்தின் பின்னணி இசை அமைக்கும்போது நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லியும் ரசிகர்களை வியக்க வைப்பார். இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், " எனது கச்சேரியில் ஏதாவது ஒரு பாடல் எப்போது இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் அது என்ன பாடல்?" என கேள்வி எழுப்பினார்.

இசைக் கடவுளே: இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் சராமாரியாக போட்டி போட்டு பதிலளித்து வருகிறார்கள். ரசிகர் ஒருவர் கூறும்போது, " ஒரு Sony 60 கேசட்டில் 12 பாடல்கள் பதிவு செய்யலாம். அந்த 12 பாடல்களும் இந்த ஒரே பாட்டை பதிவு செய்து காலையில் இருந்து இரவு வரை கேட்டிருக்கிறேன். காலை சுப்ரபாதமே இந்த பாட்டுதான் இசை கடவுளே" என குறிப்பிட்டு என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி என்ற பாடலின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இன்னொரு ரசிகரோ, " கமல்ஹாசனை கூட்டி வந்து பொன்மானை தேடுதே பாட வைங்க சாமி " என பொன்மானை தேடுதே என் வீணை பாடுதே என்ற பாடலின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ஜானகியின் ஆலாபனம்: இன்னொருவரோ, " மேகங்கள் கரைந்து மழையாக பொழிவது போல, பனித்துகள் உருகி நதியாக செழிப்பது போல, ராஜாவின் இந்த இசை என்னை ஏதோ செய்கிறது... ராஜாவின் குரலையும் தாண்டி ஜானகியின் ஆலாபனம் கிறங்கடிக்கிறது" என பதிவிட்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான மெட்டி படத்திலிருந்து மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட என்ற பாடலைப் பாடவேண்டும் என்று எழுதியுள்ளார்.
200 ஆண்டுகள்: மற்றொரு ரசிகர், " விருமாண்டி படத்திலிருந்து கருமாத்தூர் காட்டுக்குள்ளே. அப்படியே .. ஜனனி ஜனனி பாடலைத் தவிர்க்கவும். சமஸ்கிருத வாடை அதிகமாகவே கலந்திருக்கு. வேண்டாமே.. தாய்மொழி தமிழ், தொன்மையான அதன் இறை வழிபாடு இதன் கூறுகள் ஜனனி பாடல் வரிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக்கூட இல்லை. நன்றி ஐயா" எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல் இசைஞானி இளையராஜாவின் இந்த பதிவுக்கு, நடிகர் ஸ்ரீமன் கமெண்ட்டில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், " அப்படி ஒரு பாடலை மட்டும் சுட்டிக் காட்டுவது என்பது சிரமமான விஷயம். நீங்கள் அனைத்து கச்சேரிகளிலும் பாடும் ஜனனி ஜனனி பாடலே அருமை. மனதைக் கவர்ந்த பாடல்கள் என 500 பாடல்கள் உள்ளது. இதில் ஒரு பாடலைத் தேர்வு செய்ய 200 ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டும்" என பதிவிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் பல ரசிகர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











