Bhavatharini - அடிக்கடி வயிற்று வலி.. ரத்த வாந்தி.. பவதாரிணிக்கு குடும்பம் கடைசியில் செய்தது என்ன தெரியுமா?
சென்னை: இளையராஜாவின் மகளான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு பித்தப்பையில் புற்றுநோய் வந்ததன் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவரது கடைசி காலம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடகியாக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேல் பாடல்கள் பாடியிருக்கும் அவர் பத்து படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே பயிற்சி பெற்று மேடைகளில் பாடல்கள் பாடி வந்தார். இளையராஜா இசையமைத்த ஆன்மீக பாடலான ரமண மாலையில் பவதாரிணியின் குரல் பலரையும் ஈர்த்தது. அந்தக் குரலை கேட்ட ரசிகர்கள் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கிறது என்றே பேசி வந்தனர்.

காதல் வானிலே: ராசய்யா படத்தின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி. காதல் வானிலே என்று தொடங்கும் அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். முதல் பாடலிலேயே ஜாம்பவானுடன் பாடும் வாய்ப்பை பெற்ற அவர்; எந்தவித பதற்றமோ சொதப்பலோ இல்லாமல் அசால்ட்டாக பாடியிருப்பார். இன்னமும் அந்தப் பாடலை கேட்கும் சிலர் அதை பாடியது எஸ்.ஜானகி என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு அவரது குரல் இருக்கும்.
முன்னணி பாடகி: காதல் வானிலே பாடல் பாடிய பிறகு தொடர்ந்து பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி காதலுக்கு மரியாதையில் ஓ பேபி, இது சங்கீத திருநாளோ, டைம் படத்தில் தவிக்கிறேன் தவிக்கிறேன், அழகி படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா, பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என பல பாடல்களை பாடினார். இவற்றில் மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
புற்றுநோய்: சபரி ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர்10 படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கு பித்தப்பையில் புற்றுநோய் ஏற்பட்டது. இதனையடுத்து இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சமீபத்தில் சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜாவை ரொம்பவே நொறுங்கி போக செய்திருக்கிறது. ஏனெனில் இளையராஜாவின் செல்லமாகவே பவதாரிணி வலம் வந்தார்.
அந்தணன் வீடியோ: இந்நிலையில் பவதாரிணி இறப்பு குறித்து பத்திரிகையாளர் அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "தனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கே தெரிய வந்தது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த நோயிலிருந்து அவரால் வெளியே வந்திருக்க முடியும். பவதாரிணிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்திருக்கிறது.
ரத்த வாந்தி: அடிக்கடி உடம்பில் பிரச்னைகள் வந்திருக்கின்றன. அப்படி வரும்போதெல்லாம் தற்காலிகமாக வலி நிவாரணிகளை மட்டும் எடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்த பிறகுதான் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எல்லா விதமான சோதனைகளை மருத்துவர்கள் செய்து முடித்த பிறகுதான் அவருக்கு கேன்சர் என்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் அதற்குள் கேன்சர் கிட்டத்தட்ட 90 சதவீதம்வரை பரவிவிட்டது. எனவே ஒன்றுமே செய்ய முடியாது என்கிற சூழலுக்கு மருத்துவமனையும் வந்துவிட்டது. ஹீமோதெரஃபி கொடுத்து அவரை வாழ வைக்கலாம் என்று முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பவதாரிணியின் உடலில் பலம் இல்லை.
குடும்பம் இதைத்தான் செய்தது: பவதாரிணிக்கு கேன்சர் என்பதை அவரிடம் அவரது குடும்பத்தினர் சொல்லவில்லை. மொத்த குடும்பத்துக்கும் அவர் செல்ல பிள்ளையாகவே இருந்தார். ஒட்டுமொத்த சொந்தமும் பவதாரிணியை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே வைத்திருந்திருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புகூட ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு பவதாரிணியை அழைத்து வந்து அவருக்கு பிடித்த பாடல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் பாடினார்கள். நகைச்சுவை செய்தார்கள். ஏனெனில் அவர்களை பொறுத்தவரை பவதாரிணி விரைவில் இறந்துவிடுவார். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்திருக்கிறது. உண்மையில் அந்த குடும்பம் ரொம்பவே நல்ல குடும்பம்" என்றார்.


Click it and Unblock the Notifications











