தங்கமீன்களை இழந்த தகப்பன்கள்.. மகள்களை பறிகொடுத்த கபிலன், விஜய் ஆண்டனி, இளையராஜா.. தொடரும் சோகம்
சென்னை: தந்தை இருக்கும் போது தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தைகள் உயிரிழப்பது என்பது மிகவும் மோசமான துயரம். கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் இந்த சோதனையை சந்தித்து வருவது பெருந்துயரமாக மாறி வருகிறது. பாடலாசிரியர் கபிலன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் தங்கள் கண் முன்னே தங்கள் மகள்கள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து சொல்ல முடியாத வேதனையில் மனமுடைந்து போகும் நிலைமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவர்களுக்கு யார் என்ன ஆறுதல் சொன்னாலும், எப்படி தேற்றினாலும் அவர்களை உண்மையிலேயே ஆறுதல் படுத்துவதோ தேற்றுவதோ கடுமையான விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். இசைஞானி தனது மனைவியை தொடர்ந்து தனது செல்ல மகளையும் இழந்து விட்டு இன்று இடிந்து போய் நிற்பது பலரையும் மனவேதனை அடையச் செய்கிறது.

கபிலன் மகள் மரணம்: தமிழ் சினிமாவின் திறமையான பாடலாசிரியரான கபிலன் தனது மகள் தூரிகையை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இழந்து தவித்த காட்சிகள் ரசிகர்களை பதைபதைக்க செய்தன. இளம் பருவக் குமரியாக வளர்ந்து நின்ற தூரிகை திடீரென அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற "உன் சமையல் அறையில் நான் உப்பா.. சர்க்கரையா" பாடலை எழுதி அறிமுகமான கபிலன் 20 ஆண்டுகளாக 100 படங்களுக்கும் மேல் பணியாற்றி உள்ளார். அவரது மகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்றது. திருமணத்துக்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. மகளின் மறைவு கபிலனை நிலை குலையச் செய்து விட்டது.

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தனது 16 வயதில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமா உள்ளிட்டோர் மகளை பிரிந்து மீளாத் துயரில் ஆழ்ந்து விட்டனர். பள்ளியில் பிரச்சனையா, என்ன பிரச்சனை காரணமாக இப்படியொரு முடிவெடுத்தார் மீரா என்பதே தெரியாமல் தந்தை விஜய் ஆண்டனி தவித்து வருகிறார்.

இளையராஜா மகள் பவதாரிணி மறைவு: பாடல் துறையை சார்ந்த பிரபலங்களின் வீடுகளில் தந்தையின் கண் முன்னே மகள்கள் மரணிப்பது பெற்றெடுத்த அப்பாவுக்குத் தான் அந்த் வலியும் வேதனையும் புரியும். 80 வயதை கடந்த இளையராஜா தனது மகள் பவதாரிணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்படுவதை பார்த்து இடிந்து போய் விட்டார். இலங்கை மருத்துவமனையிலேயே உயிரிழந்த உடலாக பாடும் குயில் பவதாரிணி இருந்ததை பார்த்து கதறி அழுத இளையராஜா தனது மகளுக்கு இறுதிச்சடங்குகளை செய்து இசையோடு என்றும் கலந்திரு மகளே என கலங்கிய உள்ளத்துடன் வழியனுப்பி வைத்து வாயடைத்துப் போய் விட்டார். தங்கமீன்களை இழந்து வாடும் தந்தையர்களின் இந்த கொடுமையான நிலைமை இனி எந்தவொரு தந்தைக்கும் வரக்கூடாது என்றே ரசிகர்கள் இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











