புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா
சென்னை : கன்னட சினிமாவின் பவர்ஸ்டார் என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், அக்டோபர் 29 ம் தேதியன்று ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். இது திரையுலகிற்கும், அவரது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
Recommended Video
புனித் ராஜ்குமாரின் உடல், ரசிகர்களின் இறுதி அஞ்சலிக்காக பெங்களூரு கன்தீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர் சிந்திய ரசிகர்கள்
கொட்டும் மழை, பனி ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் இரவு முழுவதும் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் அதிகாலை 5.30 மணிக்கு துவங்கிய சமயத்திலும் சாலையின் இரு புறமும் ஏராளமானோர் கண்ணீர் சிந்தி, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தின் போது கிட்டதட்ட 10 லட்சம் ரசிகர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரின் அஞ்சலிக்கு பிறகு புனித் ராஜ்குமாரின் உடல், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள கன்தீரவா ஸ்டூடியோவில், தந்தை ராஜ்குமார் மற்றும் தாய் பர்வதம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

படிப்பு செலவை ஏற்ற விஷால்
புனித் ராஜ்குமாரின் மறைவிற்காக இந்திய திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் சோஷியல் மீடியாக்கள் இரங்கல் தெரிவித்தனர். புனித் ராஜ்குமார் கல்வி உதவி செய்து வந்த குழந்தைகளின் படிப்பு செலவை இனி தான் ஏற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா
இந்நிலையில் இசைஞானி இளையராஜா, புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றி உள்ளார். திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

எஸ்பிபி.,க்காக பிரார்த்தனை
இதற்கு முன் கடந்த ஆண்டு பிரபல பின்னணி பாடகரும், பல ஆண்டு கால நெருங்கிய நண்பருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்த போதும் இளையராஜா, திருவண்ணாமலை சென்று மோட்ச தீபம் ஏற்றினார். எஸ்பிபி.,யின் ஆத்மா சாந்தி அடைய அவர் பிரார்த்தனை செய்தார்.


Click it and Unblock the Notifications











