Ilayaraja: பாக்யராஜை அவமதித்த இளையராஜா.. பாடம் கற்பித்த பாக்யராஜ்.. ரஜினி முன்னாலே இசைஞானி ஷேரிங்ஸ்
சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் என மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் பாக்யராஜ். இவர் இந்திய திரை உலகிலேயே திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்டு வருபவர். இவர் திரையுலகில் தனது 50ஆம் ஆண்டினை நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா தனக்கு பாக்யராஜ் எப்படி பாடம் கற்பித்தார் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது அதில் பேசுகையில், " நான் 16 வயதினிலே படத்திற்கு பின்னணி இசை அமைத்துக் கொண்டு உள்ளேன். அப்போது, திடீரென ஒரு குரல், கட்... கட்.. கட் என்று கத்துகிறது. யார் என்று திரும்பிப் பார்த்தால் அது பாக்யராஜ். யாரு இது என்று பாரதிராஜாவிடம் கேட்க, அவர் இவர் குறித்துச் சொன்னார். இதனால் அவரை நான் ரொம்பவும் மட்டமாகத்தான் நடத்தி வந்தேன்.

இளையராஜா: ஒருமுறை பாரதிராஜா கதை சொல்ல முடியாமல் போக, பாக்யராஜ் கதை சொல்வார் என்று பாரதிராஜா கூறினார். நானோ, ஏன் இப்படி கண்டவர்களை எல்லாம் கதை சொல்ல வைக்கிறாய் என்று கேட்டேன். பாக்யராஜும் வந்து கதை சொன்னார். எனது வாழ்க்கையில் ஒருவர் கதை சொல்வதைப் பார்த்து நான் மிகவும் வியந்தவர்களில் இவரும் ஒருவர். அவர் கதை சொன்னதைக் கேட்டு கேட்டு, சிரித்து சிரித்து எனக்கு வயிறு எல்லாம் புண் ஆனது போல மாறிவிட்டது.
பாடம் கற்றுக் கொடுத்த பாக்யராஜ்: அதில் இருந்து தான் நான் ஒரு முடிவெடுத்தேன், யாருக்குள் என்ன திறமை இருக்கும் என்பதை தீர்மானிக்க நாம் யார் என்று யோசித்தேன். அன்றில் இருந்து புது இயக்குநர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு படம் பண்ணுவது என்று முடிவெடுத்தேன். நான் அப்படிப்பட்ட முடிவு எடுக்க முக்கிய காரணமே, பாக்யராஜ் தான். எனக்கு பாடம் கற்பித்தவர் பாக்யராஜ். நான் அவரிடம் கற்றுக் கொண்ட பாடம் இதுதான். அவர் இன்னும் பல ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்" என்று வாழ்த்தி பேசினார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்ததுடன், இளையராஜா தனது இளமைக் காலத்தில் இருந்தே மிகவும் கர்வத்துடன் தான் இருந்துள்ளார் என்று பலரும் விமர்சிக்கவும் செய்கிறார்கள். இளையாராஜா இந்த விஷயம் குறித்து பேசுகையில் மேடையில் ரஜினியும் இருந்தார்.


Click it and Unblock the Notifications











