மிஷ்கினிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா!

இளையராஜாவை சிலர் கோபக்காரர் என்பார்கள். அவர் மிகச் சரியாகவும், அவரைச் சுற்றி நடப்பவை தவறாகவும் இருக்கும்போது வரும் கோபம் அது. ஆனால் பரிவு காட்டுவதிலும், அரவணைத்து அடுத்த கட்டத்துக்கு ஒருவரை நகர்த்துவதிலும் அவர் காட்டும் அக்கறை மகத்தானது.
பாலுமகேந்திரா இயக்கிய அத்தனை படங்களுக்கும் ராஜாதான் இசை (அழியாத கோலங்கள், சந்தியா ராகம் தவிர). ஆனால் இதுவரை எந்தப் படத்துக்கும் இதுதான் சம்பளம்... இவ்வளவு கொடுக்க வேண்டும் என ஒரு முறை கூட பேசியதில்லை இளையராஜா.
பாலுமகேந்திரா தருவதை வாங்கிக் கொள்வது அவர் வழக்கம். இதை பாலுமகேந்திரா பலமுறை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்வதுண்டு.
சில புதிய இயக்குநர்களிடம் பணமே வாங்கிக் கொள்ளாமல் டெக்னீஷியன்களுக்கு மட்டும் செட்டில் செய்யச் சொல்லிவிட்டு இளையராஜா இசையமைத்த செய்திகள் கடந்த 38 ஆண்டுகளில் நிறையவே வெளிவந்துள்ளன.
சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம் இயக்குநர் மிஷ்கினுக்கு நேர்ந்துள்ளது.
அவரது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு மிகச் சிறந்த இசை தந்திருந்தார் ராஜா. அதை கவுரவப்படுத்தும் விதமாக, தயாரிப்பாளர் - இயக்குநர் என்ற தன் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி, முன்னணி இசை இளையராஜா என்று விளம்பரங்களில் போட்டார் மிஷ்கின்.
படம் வெளியான பிறகு, இந்தப் படத்துக்கு இசையமைத்ததற்காக இளையராஜாவுக்கு ஒரு தொகையைக் கொடுத்திருக்கிறார் மிஷ்கின் (இசையமைக்கும் முன்பே பணம் வாங்கிவிடும் இன்றைய காலத்தில்...).
படத்தின் பப்ளிசிட்டிக்கே பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக மிஷ்கின் அளித்திருந்த பேட்டிகளைப் படித்திருந்ததால், தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறிய ராஜா, தனது டெக்னீஷியன்களுக்கு மட்டும் பணத்தை செட்டில் செய்யச் சொன்னாராம். இதை நெகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் கூறி வருகிறார் மிஷ்கின்.


Click it and Unblock the Notifications











